ஆர்.எம்.கே-13; திட்டங்களின் அமலாக்கத்தில் தாமதம் ஏற்படாமல் இருக்க தொடர் கண்காணிப்பு!
- Muthu Kumar
- 03 Aug, 2025
புத்ராஜெயா, ஆக. 3-
13 ஆவது மலேசியத் திட்டம், ஆர்.எம்.கே.13இன் கீழ் உள்ள ஒவ்வொரு திட்டத்தின் அமலாக்கத்திலும் எந்த தாமதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
ஆர்.எம்.கே.13-இன் கீழ் உள்ள திட்டங்கள் நிதி அமைச்சு, பொருளாதார அமைச்சுடன் இணைந்து கண்காணிக்கப்பட விருப்பதோடு, அது குறித்த அறிக்கை ஆண்டிற்கு இரண்டு முறை வெளியிடப்படும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.
"இந்த முறை அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். ஏனெனில், இது 2030ஆம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தை உள்ளடக்கியுள்ளது. எந்தவொரு தாமதமும் மக்களைப் பாதிக்கும் என்பதால், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்," என்றார் அவர்.
ஆர்.எம்.கே.13இன் கீழ் ஒவ்வொரு திட்டத்தையும்,சம்பந்தப்பட்ட இடங்களுக்கு திடீர் வருகை புரிந்து தாமே பார்வையிடவிருப்பதாகவும் அவர் கூறினார்.
"மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம். மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.எனவே, இந்த வளர்ச்சியை உடனடியாக, தாமதமின்றி, அதிகாரத்துவம் இல்லாமல் நாங்கள் மேற்கொள்ள வேண்டும்," என்று ஷம்சுல் குறிப்பிட்டார்.நேற்று புத்ராஜெயாவில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



