அதிமுக - தவெக கூட்டணி? எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க்!

top-news
FREE WEBSITE AD

இன்னும் சில மாதங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்குள் தவெக வரும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருவது மிகப்பெரிய ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது.ஏனென்றால் தவெக தலைவர் விஜய் இதுவரை கூட்டணி தொடர்பாக எந்தவொரு வார்த்தையையும் பேசாத நிலையில், எடப்பாடி பழனிசாமி மாபெரும் கூட்டணி உருவாகும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.

கடந்த ஆண்டு விக்கிரவாண்டி மாநாடு முடிவடைந்த பின், அதிமுகவின் முக்கியத் தலைவர் ஒருவர் தவெக தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க தவெக உடன்பட்டதாகவும், ஆனால் விஜய்யின் டிமாண்ட் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல் வெளியாகியது.

தவெகவுக்கு 80 தொகுதிகள், 2 ஆண்டுகள் முதல்வர் பதவி என்று விஜய்யின் டிமாண்ட் உச்சத்தில் இருந்தது. ஆனால் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அதன்பின் அமித்ஷாவை சந்தித்த அவர், கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்தார். இதையடுத்து ஏப்ரலில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளதாக அறிவித்தார்.

இதன்பின் அதிமுக, பாஜகவையும் தவெக தலைவர் விஜய் விமர்சிக்க தொடங்கினார். அதேபோல் கரூர் விவகாரத்திற்கு பின் தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் அத்தனை பேரும் ஓடி ஒழிந்து கொண்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனை பயன்படுத்தி தவெகவை தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார்.

கரூர் விவகாரத்தின் போது தவெக மற்றும் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், அதிமுக தொண்டர் ஒருவர் தவெக கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார். அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி, அங்க பாருங்க, கொடி பறக்குது,பிள்ளையார் சுழி போட்டாச்சு. எழுச்சி,ஆரவாரம் என்று உற்சாகமாகினார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடிகள் அதிகரித்தது. அதிமுக மற்றும் பாஜக கொடிகள் மட்டுமல்லாமல் தவெக கொடியும் இடம்பெறத் தொடங்கியது பல்வேறு குழப்பங்களை எழுப்பியது. அதுமட்டுமல்லாமல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாபெரும் கூட்டணி அமைக்கப்படும் என்று பேச தொடங்கி இருக்கிறார்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியால் புதிய வாக்காளர்களை கவர முடியவில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. திருமாவளவன், பெ.சண்முகம், முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தவெக இணையும்.. விஜய் வருவார் என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பேசி வருகிறார்.

இது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக போன்ற பெரிய கட்சியின் பொதுச்செயலாளர், புதிய கட்சி கூட்டணிக்காக காத்திருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமியின் பாடும் திண்டாட்டம்தான்.

தவெக பக்கம் இருந்தோ, விஜய் தரப்பில் இருந்தோ இதுவரை கூட்டணி தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் தவெக தொடக்கம் முதலே தங்களின் தலைமையில் தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கொள்கை எதிரியாக சொல்லப்படும் பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்குமா என்பதும் சந்தேகம் தான். இதனால் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிற்கு பின் என்ன கணக்கு உள்ளது என்பது பேசுபொருளாகி இருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *