இந்தியாவுடன் 11 ஒப்பந்தங்கள்! அன்வாரின் தலைமைத்துவத்திற்கான சான்று! - ஆர்.ரமணன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 10: இந்தியாவுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தானது, பிரதமர் டத்தோக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் தலைமைத்துவத்திற்கான ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளது என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கிய சாதனை, மலேசியா–இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த ஒப்பந்தங்கள் உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, ஆசியான் (ASEAN) பிராந்தியத்தில் மலேசியாவின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துகின்றன என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் மலேசியா–இந்தியா இருதரப்பு வர்த்தகம் RM79.49 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஆசியான் நாடுகளுக்குள் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக மலேசியா திகழ்கிறது.

இந்த வளர்ச்சிக்கு, பொருளாதார சீர்திருத்தங்கள், அரசியல் நிலைத்தன்மை, முதலீட்டை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து பின்பற்றப்படும் அரசுக் கொள்கைகள் ஆகியவையே காரணம் என ரமணன் விளக்கினார்.

இந்த ஒத்துழைப்புகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அதிகாரப்பூர்வ மலேசிய விஜயத்தின் போது உறுதிப்படுத்தப்பட்டன.

இரு பிரதமர்களும் ஒப்பந்த ஆவணங்கள் பரிமாறப்படுவதை நேரில் சாட்சியமாகக் கண்டனர். இது, மலேசியாவின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை மீது இந்தியாவுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகும்.

இந்த கூட்டாண்மையின் முக்கிய அம்சமாக, செமிகண்டக்டர் (Semiconductor) துறையில் மேற்கொள்ளப்படும் மூலோபாய ஒத்துழைப்பு விளங்குகிறது.

இந்த ஒப்பந்தம், உலகளாவிய உயர் தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலியில் மலேசியா இன்னும் நம்பகமான, போட்டித் திறன் மிக்க நாடாகத் திகழ்கிறது என்பதற்கான தெளிவான சிக்னல் என்று ரமணன் வலியுறுத்தினார்.

இதனைத் தவிர, தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி கல்வி (TVET) துறையில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் மனித வள மேம்பாட்டிலும் இந்த ஒத்துழைப்பு விரிவடைகிறது.

மேலும், சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, சமூக பாதுகாப்பு போன்ற துறைகளிலும் புதிய உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், மலேசியாவின் PERKESO மற்றும் இந்தியாவின் Employees’ State Insurance Corporation (ESIC) இடையிலான தனிப்பட்ட ஒப்பந்தமும் அடங்கும்.

இந்த ஒப்பந்தங்கள், உயர் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தேசிய தொழிலாளர் பலத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *