ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் - திருச்சி மாநாட்டில் தெறிக்கவிட்ட சீமான்!
- Muthu Kumar
- 22 Feb, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தனது 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் பிஸியாக இருக்கும் வேளையில், தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் வேகம் காட்டியுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில் பாலினச் சமத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. 234 தொகுதிகளில் 117 இடங்களில் ஆண்களும், 117 இடங்களில் பெண்களும் சரிசமமாகப் போட்டியிடுகின்றனர். “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்கும்” என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, அரசியலில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற தனது கொள்கையில் சீமான் உறுதியாக இருப்பதை இது காட்டுகிறது.
வேட்பாளர்கள் பட்டியலில் தேர்வில் படித்த இளைஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காரைக்குடி தொகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். மேலும், வீரப்பனின் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும், கி.ஆ.பெ. விஸ்வநாதனின் பேத்தி வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் தொகுதியிலும் போட்டியிடுவது போன்ற முக்கிய அறிவிப்புகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
வழக்கம்போல இம்முறையும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் ‘தனித்துப் போட்டி’ என்ற நிலைப்பாட்டில் நாம் தமிழர் கட்சி உறுதியாக உள்ளது. “மாற்று அரசியல்” மற்றும் “தமிழ் தேசிய” முழக்கங்களை முன்வைத்து, விவசாயி சின்னத்தில் களம் காணும் அக்கட்சி, இந்த தேர்தலைத் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக மாற்றும் முனைப்புடன் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



