பினாங்கில் 4ஆவது ஆசிய பசிபிக் எலும்புருக்கி நோய் மாநாடு!
- Muthu Kumar
- 02 Oct, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, அக். 2-
பினாங்கு மாநிலத்தின் பார்க்ராயல் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற 4ஆவது ஆசிய பசிபிக் எலும்புருக்கி நோய் மாநாட்டில் அனைத்துலக ரீதியாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களும், நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும். பயிற்சியாளர்களும் என அத்துறையைச் சார்ந்த பிரிவுகளின் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டிற்கு சிறப்புப் பிரமுகராக வருகையளித்திருந்த மாநில ஆட்சிக் குழுவின் சுகாதாரத் துறைக்கான செயற்குழுத் தலைவர் டேனியல் கூய், இதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையில், எலும்புருக்கி நோய் தொடர்பான மருத்துவத்தில் சமீபத்திய உபகரணங்களின் கண்டு பிடிப்புகளும் அதற்கான உரிய நிவாரணங்களும் தொடர்பில், பற்பல கருத்துப்பரிமாற்றங்களுக்கும் இம்மாநாடு பேருதவியாக துணை நிற்பது திண்ணமென்று நம்பிக்கை தெரிவித்தார்.
சொறி நச்சுக் காய்ச்சல், கொப்புள நோய் புள்ளிக் காய்ச்சல் அல்லது மலைக் காய்ச்சல் போன்றவை திசையன்களால் பரவும் தன்மை கொண்டவையாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக அபாய நிலைக்கு கொண்டு செல்கின்ற அவலம் கவலையளிக்கக் கூடியது எனவும், உண்ணிகள். பூச்சிகள், பேன் போன்றவற்றால் பரவுகின்ற பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் நோய்களும் தற்போது மருத்துவத் துறைக்கு கடும் சவாலாகவும் சிக்கல்களாகவும் உருவெடுத்திருப்பது தொடர்பில் ஆய்வுகள் மிக அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இத்தகு நோய்களின் ஆரம்பகால கண்டறிதல் நிவாரணத்திற்கு சாத்தியமெனவும் தாமதமான நோயறிதலே பின்னடைவுகளுக்கு காரணமாகி விடுவதாகவும் சுட்டிக் காட்டிய டேனியல். இது குறித்த விழிப்புணர்வும் பொது மக்கள் மத்தியில் போதுமான பரப்புரைகளுக்கு துணை நிற்காமலிருப்பதும், பாதிப்புகள் மிகுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றம் போன்றவை இந்நோய்களின் பரவலுக்கு தூண்டுதலாக அமைவதும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமென்று அவர் வலியுறுத்தினார்.
எலும்புருக்கியுடன் தொடர்புடைய இத்தகு தொற்று நோய்கள் மீதான ஈடுபாடு இளம் விஞ்ஞானிகள் பலரிடம் காணப்படுவது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறிய டேனியல், இம்மாநாட்டில் பங்கேற்றிருக்கும் இத்துறை சார்ந்த மருத்துவப் பிரமுகர்கள் யாவரும் ஒருங்கிணைந்த நிலையில் தத்தம் கூட்டுத் திரட்டுகளை மருத்துவ உலகிற்கு எடுத்துரைப்பதிலும், பங்களிப்பதிலும் ஓர் உறவுப் பாலமாக இதன் வழி செயல்பட வேண்டுமென்பதை தாம் கோரிக்கையாக முன்வைப்பதாகவும் கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



