இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப்!
- Muthu Kumar
- 20 Jul, 2025
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் அமைந்த 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இந்த தாக்குதலில் இந்தியா துல்லியமான ஆயுதங்களை பயன்படுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை ஒழித்ததாக முப்படை தலைமைத் தளபதிகள் இணைந்து தெரிவித்தனர்.
இது பாகிஸ்தானை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அந்த நாடும் பதிலடி தாக்குதலுக்கு முயன்றது. இருதரப்புகளுக்கும் இடையே மூன்றுக்கு மேற்பட்ட நாட்களாக நடந்த தாக்குதலின் பின்னணியில், இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தச் சூழலில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தீவிரமான சண்டையை தடுக்க நான் எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றன" என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தியா திட்டவட்டமாக "சண்டை நிறுத்தத்தில் எந்த 3வது நாடும் தலையிடவில்லை" என மறுத்திருந்தபோதும், டிரம்ப் தற்போது மீண்டும் "நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டு அந்தப் போரை நிறுத்தச் செய்தோம்" என்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை ஒரு புதிய வகை அணு போர் போன்று இருந்தது. இரு நாடுகளும் மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுத நாடுகள். இருவரும் தாக்குதலில் ஈடுபட்டனர். நான் நினைப்பதாவது, 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இருவரிடமும் அழுத்தம் செலுத்தினோம். 'உங்களுக்கு வர்த்தக ஒப்பந்தம் வேண்டுமா, இல்லையா?' என்று கேட்டோம். அணு ஆயுதங்களை வீசவோ, அதனால் உலகத்தை அழிக்கவோ நீங்கள் நினைத்தால், ஒப்பந்தம் கிடையாது என எச்சரித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலின் போது இந்தியாவின் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக முன்பே தெரிவித்திருந்தது. ஆரம்பத்தில் இந்தியா மறுத்தாலும், பின்னர் ராணுவ அதிகாரிகள் இந்த உண்மையை ஒப்புக்கொண்டனர். ஆனால், டிரம்ப் கூறும் 5 விமானங்கள் வீழ்ந்தது தொடர்பாக இந்தியா எந்தத் தகவலும் உறுதிப்படுத்தவில்லை.இந்த பரபரப்பு பின்னணியில் டிரம்ப் பேசியது , இருநாட்டு உறவுகளிலும், சர்வதேச ரீதியிலும் புது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



