7,500 அந்நியத் தொழிலாளர்கள் தேவை-பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஸ்!
- Muthu Kumar
- 23 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 23-
மலேசிய இந்திய உணவகங்களில் வேலை செய்ய 7,500 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆள் பற்றாக்குறையை தீர்க்க இந்த எண்ணிக்கை மிகவும் அவசியம் என்று மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ கோ. சுரேஸ் கூறினார்.
நீண்ட காலமாக நாங்கள் போராடி வருகின்றோம். இதற்கு முழுமையான தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.நேற்று சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ சுரேஸ் மேற்கண்டவாறு கூறினார்.சில தினங்களுக்கு முன்பு உணவகம் உட்பட பத்து துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள விண்ணப்பம் டிசம்பர் 31ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நகத்தியோன் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கம் பெரிதும் வரவேற்கிறது என்று அதன் தலைவர் டத்தோ சுரேஸ் தெரிவித்தார்.மலேசிய இந்திய உணவகங்களில் வேலை செய்ய 7,500 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
உள்துறை அமைச்சரின் அறிவிப்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் வழிமுறைகள், நடைமுறைகள் என்ன என்பது எங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.இது தொடர்பாக உள்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பாக நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வது ஒருபக்கம் இருந்தாலும் Gantian எனப்படும் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் உடனடியாக அனுமதி வழங்கினால் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கி இருக்கும் சவால்களுக்கு தீர்வு காணலாம் என்றார்.
உணவகங்களில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்களின் வயது வரம்பு 45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த வயது வரம்பை 60ஆக உயர்த்த வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
உணவகங்களில் வேலை செய்யும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நன்கு அனுபவம் பெற்றவர்கள். இவர்களால் சுவையான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சமைத்துக் கொடுக்க முடியும்.ஆகவே அனுபவம் வாய்ந்த அந்நியத் தொழிலாளர்களை தொடர்ந்து வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று டத்தோ சுரேஸ் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரிமாஸ் துணைத்தலைவர் கிருஷ்ணன். உதவித் தலைவர் டாக்டர் சீனு, செயலாளர் சண்முகம், பொருளாளர் விஜயபெருமாள் உட்பட உச்சமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



