91,197 நபர்கள் ஸ்கிம் கைராட் டாருல் ஏஹ்சான் திட்டத்தில் தகவல்களைப் புதுப்பித்துள்ளனர்!
- Muthu Kumar
- 28 Oct, 2025
ஷா ஆலம், அக்.28-
ஜூன் முதல் செப்டம்பர் வரை மொத்தம் 91,197 நபர்கள் ஸ்கிம் கைராட் டாருல் ஏஹ்சான் திட்டத்திற்கான விண்ணப்பத் தகவலைப் புதுப்பித்துள்ளனர்.அதே காலகட்டத்தில் மொத்தம் 1,473 கோரிக்கைகள், ஒவ்வொன்றும் வெ.1,000 மதிப்பில், இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன என மாநில சமூக நலத்துறை செயற்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
"ஸ்கிம் கைராட் டாருல் ஏஹ்சான் என்பது மாநில அரசின் புதிய முயற்சி ஆகும். இது முன்பு இருந்த மரண நிதி திட்டங்களின் நன்மைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
"ஸ்கிம் மெஸ்ரா ஊசியா எமாஸ் மற்றும் இல்திசாம் சிலாங்கூர் சிஹாட் ஆகிய திட்டங்களில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், மே 5 முதல் யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் இணையதளத்தின் மூலம் தங்களின் தகவலைப் புதுப்பிக்க வேண்டும், என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் நன்மைகளை மேலும் பலர் பெறும் வகையில், ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை மாநில அரசு புதிய விண்ணப்பங்களைத் திறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இத்திட்டம் குறித்த அறிவிப்புகள் குறுந்தகவல் சேவை வழியாகவும், சட்டமன்ற உறுப்பினர் சேவை மையங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் SMUE வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சிகளில் பரவலாகவும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என அன்ஃபால் தெரிவித்தார்.
சிலாங்கூர் 2025 நிதி திட்டத்தின் கீழ், மாநில அரசு KDE திட்டத்திற்காக வெ.20 மில்லியன் ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை சுமார் 20,000 பயனாளர்களுக்கு நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, மூத்த குடிமக்களுக்கான SMUE மரண நிதி உதவி 2019 மே மாதத்தில் நிறுத்தப்பட்டு, 2021 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பதிவு செய்யப்பட்ட வாரிசுகள் வெ.500 பெற முடிந்தது.
மேம்படுத்தப்பட்ட இத்திட்டம் தற்போது அதிக நிவாரணத் தொகையையும், விரிவான பயனாளர் வரம்பையும் கொண்டுள்ளது. இது மாநில அரசின் மக்களின் நலனைக் காக்கும் முயற்சியுடன் இணைந்ததாகும்.புதிய விண்ணப்பங்கள் மற்றும் தகவல் புதுப்பிப்புகள் kde.yawas.com. my இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



