சபா சட்டமன்றத் தேர்தல்: பக்காத்தானுக்கும் தேமுவுக்கும் இடையிலான தொகுதி ஒதுக்கீடு பேச்சுகள் முடிந்துவிட்டன!
- Muthu Kumar
- 29 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 29 -
பக்காத்தான் ஹராப்பானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையிலான, சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுக்கள் முடிந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து இவ்விரு கூட்டணிகளும் ஒரே கூட்டணியின் கீழ் சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று, பிகேஆர் கட்சித் தலைமைச் செயலாளர் ஃபூஸியா சாலே தெரிவித்துள்ளார்.
மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக எந்த ஒரு கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிட பிகே ஆர் எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறிய ஃபூஸியா, சபா தேர்தலில் போட்டியிட இவ்விரு கூட்டணிகளுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை " தெரிவிக்கவில்லை.
மாநிலத்தின் மொத்த சட்டமன்றத் தொகுதிகளில் 23 முதல் 25 தொகுதிகளில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எண்ணம் கொண்டிருப்பதாக, மாநில பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவர் முஸ்தபா சக்முட் நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை கூறியிருந்தார்.இந்நிலையில், 40 தொகுதிகளில் போட்டியிடும் தனது திட்டத்தில் சபா அம்னோ தீர்க்கமாக இருப்பதாக, அதன் தகவல் பிரிவுத் தலைவர் சுஹைமி நசிர் கடந்த மே மாதத்தில் தெரிவித்திருந்தார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பக்காத்தான் ஹராப்பானுடன் தமது கூட்டணி ஒரு தேர்தல் உடன்பாட்டைக் காணும் என்று மாநிலத்தின் ஆளும் காபுங்ஙான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நோர் அறிவிப்புச் செய்திருந்த ஒரு நாளுக்குப் பின்னர், தேமு-பக்காத்தான் சம்பந்தப்பட்ட இச்செய்தியை ஃபூஸியா வெளிபடுத்தியுள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானுடனான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுக்களும் தொடங்கப்பட்டு விட்டதாகவும் ஹஜிஜி தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



