ரஃபிஸியிடம் 8 மணி நேரம் MACC விசாரணை!

top-news
FREE WEBSITE AD

புத்ரா ஜெயா, மே 4: RM1.1 பில்லியன் மதிப்பிலான குறைக்கடத்தித் தொழில் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லியிடம் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.

காலை 10 மணிக்கு MACC தலைமையகத்திற்கு வந்த முன்னாள் பொருளாதார அமைச்சர், மாலை 6.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரஃபிஸி, விசாரணை அமர்வு சுமூகமாக நடைபெற்றதாகவும், தான் விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறினார்.

இது ஒரு சாதாரண விசாரணை செயல்முறை; அவர்கள் கேட்பார்கள், நாங்கள் பதிலளிப்போம். நான் எனது முழு ஒத்துழைப்பையும் அளித்தேன், இந்த செயல்முறை சுமூகமாக இருந்தது, ஆனால் சற்று நீண்டதாக இருந்தது  என்று அவர் கூறினார்.

நாளை காலை 10 மணிக்கு விசாரணை மீண்டும் தொடங்கும் என்றும், அது பல நாட்கள் தொடரக்கூடும் என்பதையும் ரஃபிஸி உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், நடைபெற்று வரும் விசாரணையின் நோக்கம் அல்லது திசை குறித்து மேலும் கருத்து தெரிவிக்க ரஃபிஸி மறுத்துவிட்டார்.

இந்த விசாரணை, பொருளாதார அமைச்சகம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த  ARM Limited  ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்துடன் தொடர்புடையது.

பல அரசு சாரா அமைப்புகள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 16 அன்று ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இந்த விசாரணை அறிக்கையைத் தொடங்கியது.

இந்த ஒப்பந்தம் அவசரமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக அரசாங்கத்திற்கு நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அரசு சாரா அமைப்புகள் குற்றம் சாட்டின.

இந்த வழக்கு, ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 23-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமது ஹஃபாஸ் நசார் முன்னதாகக் கூறியிருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *