மலேசியாவில் முதலாம் அனைத்துலக அகத்தியர் மாநாடு!
- Thinagaren Sanggaren
- 20 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 20-
மலேசியாவில் முதலாம் அனைத்துலக அகத்தியர் மாநாடு ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் நடைபெறவுள்ளது. இரு நாட்களுக்கு நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள இம்மாநாடு அகத்தியர் உணர்த்திய அணுவும் அறிவியலும் எனும் கருப்பொருளோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டைச் சிறந்த முறையில் நடத்த அனைத்து பொது இயக்கங்களும் அகத்தியர் இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் நோக்கமானது அனைத்து அகத்தியர் வழிபாட்டாளர்களுக்குமானதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநாட்டின் பொறுப்புகளை ஏற்க விருப்பமுள்ள இயக்கங்கள் தமிழ் மலர் அலுவலக்கத்துடன் தொடர்புக் கொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாநாட்டிற்கான முதற்கட்ட செயல்திட்டங்கள் குறித்தான கலந்தாய்வுச் சந்திப்புக் கூட்டம் தலைநகரிலுள்ள தமிழ் மலர் அலுவலகத்தில் நேற்று 19 ஜூலை காலை 11 மணிக்கு நடைபெற்றது. அகத்தியர் பெருமானின் அறிவும் தத்துவமும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்பட இந்த அறிய முயற்சி மேற்கொள்ளப்படவிருக்கின்றது. முதலாம் அகத்தியர் மாநாடு அடுத்த ஆண்டு இரு நாட்கள் நடைபெறும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு பேராளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அகத்தியர் இயக்கங்கள், பொது இயக்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிப்பர் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுவதாக முதலாம் அனைத்துலக அகத்தியர் மாநாட்டின் செயற்குழு வலியுறுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



