மனைவிக்கு ஐந்தாண்டு சிறை ஸைய்ம் இக்வான் விரக்தி-புதிய விசாரணை அதிகாரி தேவை!
- Muthu Kumar
- 01 Nov, 2025
கோலாலம்பூர், நவ. 1-
தமது மகனை புறக்கணித்ததற்காக தமது மனைவிக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்திருப்பது தொடர்பில், மனஇறுக்க நோயாளியான மரணமடைந்த ஸைன் ரேயன் அப்துல் மத்தீனின் தந்தை ஸையம் இக்வான் ஸஹாரி நீதிமன்றத்திற்குள்ளேயே தமது விரக்தியை வெளிப்படுத்தினார்.
தமது மனைவி இஸ்மானிரா அப்துல் மனாப்புக்கு எதிரான தண்டனையை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் எனினும், தமது மகனின் கொலையைப் போலவே இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
"இன்றையை (நேற்று வெள்ளிக்கிழமை) தீர்ப்பில் நான் ஏமாற்றம் அடைந்திருக்கின்றேன். என் குடும்பத்திற்கு எதிரான அநீதி மற்றும் அவதூறில் ஈடுபட்ட அனைவரும் கடவுளால் சபிக்கப்படுவார்கள் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
“இன்னமும் வெளியில் இருக்கும் எனது மகனைக் கொன்றவனை கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று, நீதிமன்ற வழக்கு முடிவுற்ற பின்னர் எஃப்எம்டியிடம் ஸைய்ம் தெரிவித்தார். தமது மகனின் கொலையை விசாரிக்க ஒரு புதிய விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தை வலியுறுத்திய ஸைய்ம், வெளிப்படைத்தன்மை இல்லாததால் தற்போதைய அதிகாரி மீது தமக்கு இனியும் நம்பிக்கை இல்லை என்றார்.
தமக்கு எதிரான சிறை தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படுவதை நிறுத்தி வைக்குமாறு இஸ்மானிரா செய்த ஒரு விண்ணப்பத்தை நீதிபதி ஷாலிஸர் வர்னோ நிராகரித்த பின்னர், "உங்கள் அனைவரையும் கடவுள் நிந்திக்கட்டும்' என்று ஸைய்ம் இக்வான் நீதிமன்றத்தில் உரக்கக் கத்தியபோது அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் தாம் “அனைத்தையும் வெளிப்படுத்தப் போவதாக" ஸைய்ம் இக்வான் கூச்சலிட்ட போதிலும், அத்தகைய ஒரு செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஸைன் ரேயனின் உடல், மறுநாள் டமான்சாரா டாமாய், இடாமான் அடுக்குமாடியில் உள்ள அவரின் வீட்டுக்கு அப்பால் உள்ள ஒரு நீரோடைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.தம்மை தற்காத்துக் கொள்ள போராடியதன் காரணத்தினால், அவரின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரிவித்த பிறகு, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



