பாகிஸ்தான் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கு,இந்தியா அடி அப்படி- மோடி!
- Muthu Kumar
- 30 Jul, 2025
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளித்தார்.அப்போது ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனியும் எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் பல எம்பிக்கள் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசினர். இரண்டாவது நாளான இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தார்.
அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மாலை ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோதே பாகிஸ்தானிடம் அது தொடர்பாகப் பேசியது தவறு என்றும் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளித்தார்.
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.தன் மீது நம்பிக்கை வைத்துள்ள 140 கோடி மக்களுக்கு நன்றி என்று கூறிய பிரதமர் மோடி, நாட்டு மக்களின் சார்பாகவே இங்கு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் கொடுமையின் உச்சம் என்ற அவர், அதற்குப் பயங்கரவாதிகளே யோசிக்காத அளவுக்கு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் காட்டுவோம் என்ற பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றும் எப்போது, எங்குத் தாக்குதல் நடத்தலாம் என்ற முடிவை ராணுவமே எடுத்தது என்றும் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனியும் எடுபடாது என்ற அவர், இந்தியா இனியும் அதற்கெல்லாம் பயப்படாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் ஏர் பேஸ்கள் இன்னும் ஐசியுவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



