மலேசியா-புரூணை: சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது!
- Muthu Kumar
- 28 Aug, 2025
புத்ராஜெயா, ஆக. 28-
மலேசியா-புரூணை இடையே சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட விருக்கும் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், புரூணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்கியா முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, சுல்தான் ஹசானால் போல்கியா திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளதை முன்னிட்டு இந்நிகழ்ச்சி புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நடைபெற்றது.
மலேசியாவைப் பிரதிநிதித்து சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸூல்கிஃப்ளி அஹ்மட்டும் புரூணையைப் பிரதிநிதித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் முஹமட் இஷாம் ஜஃபாரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
முன்னதாக, 26ஆவது மலேசியா-புரூணை
தலைவர்களின் ஆண்டு பேச்சு, ஏ.எல்.சி-ஐ முன்னிட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்க ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்கு வருகை புரிந்த சுல்தான் ஹசானால் போல்கியாவை, பிரதமர் வரவேற்றார்.
ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், தற்போதைய
பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள வட்டார, அனைத்துலக அம்சங்களில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மிக உயர்ந்த இரதரப்பு வழிமுறையான ஏ.எல்.சி. ஒரு தளமாக செயல்படுகிறது.
இப்பயணமும் வருடாந்திரக் கூட்டமும் மலேசியாவிற்கும் புரூணைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பு உறவைப் பிரதிபலிக்கின்றன.அதோடு, அவ்விரு நாட்டு மக்களின் செழிப்பு, நல்வாழ்வுக்கான வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



