மலேசியர்கள் தீமோர் லெஸ்தேயில் தடையற்ற டேட்டா ரோமிங் சேவையை பெறுவார்கள்!
- Muthu Kumar
- 27 Oct, 2025
புத்ராஜெயா, அக். 27-
நாட்டின் முக்கிய கைத்தொலைபேசி நெட்வொர்க் ஆபரேட்டர்கள் சேவையை செயல்படுத்தியதைத் தொடர்ந்து, தீமோர் லெஸ்தேயில் உள்ள மலேசியர்கள் இப்போது வசதியான, மலிவு விலையில் டேட்டா ரோமிங் சேவைகளை அனுபவிக்க முடியும்.
கடந்த அக்டோபர் 17 முதல் செல்காம் டிஜி, மேக்சிஸ், டி.எம், யூ மொபைல் ஆகிய நான்கு முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீமோர் லெஸ்தேயில் டேட்டா ரோமிங் சேவைகளை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சு அறிவித்தது. அதே நேரத்தில் ஒய்டிஎல் நிறுவனம் கடந்த அக்டோபர் 24 முதல் சேவையைத் தொடங்கியது.
இந்த முயற்சி, தீமோர் லெஸ்தேயில் உள்ள மலேசியர்கள், மற்ற ஆசியான் உறுப்பு நாடுகளில் உள்ள ரோமிங் கட்டணங்களுடன்
ஒப்பிடக்கூடிய நிலையான, மலிவு விலையில் கைத்தொலைபேசி இணைய இணைப்புகளை அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முந்தைய 2ஜி, 3ஜி உள்கட்டமைப்பு நெட்வொர்க்குடன் ஒப்பிடும்போது தீமோர் லெஸ்தேயில் 4ஜி ரோமிங் சேவை ஒரு பெரிய சாதனை என்று நேற்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வளர்ச்சி மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம், தீமோர்-லெஸ்தேயின் ஆட்டோரிடேட் நேஷனல் டி கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பின் விளைவாகும்.அத்துடன் மலேசிய கைத்தொலைபேசி நெட்வொர்க் வழங்குநர்கள், தீமோர் லெஸ்தேயின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான டெல்காம்செல், டெலிமோர், தீமோர் டெலிகாம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மூலோபாய கூட்டாண்மையின் ஆதரவின் விளைவாக இது அமைந்துள்ளது.
இந்த வெற்றி மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவம் 2025 இன் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது.இது உள்ளடக்கிய தன்மை, நிலைத்தன்மை, டிஜிட்டல் இணைப்பு ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.அத்துடன் மக்களை மையமாகக் கொண்ட சமூகத்தை வளர்ப்பதற்கான ஆசியானின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று தகவல் தொடர்பு அமைச்சு கூறியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



