அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
- Surendran Sumdraraj
- 01 Jul, 2026
சென்னை, ஜூலை 1 –
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததால் வடமாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள். பலரின் உடல்கள் ஏற்கனவே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணைக் குழுவும் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



