தொழில்முனைவோருக்கான கடன் ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும் – பிரதமர்
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 7 –
தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (PMKS) கடன் வழங்கும் செயல்முறையை நிதி நிறுவனங்களும் வங்கிகளும் மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதுள்ள கடன் ஒப்புதல் காலத்தை குறைத்து, தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய காலத்திலேயே நிதியுதவி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்தாலும், கடன் பெறுவதில் சிரமம் இருந்தால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை,” என்று பிரதமர் கூறினார்.
தேசிய தொழில்முனைவோர் பொருளாதார நிதியம் (TEKUN) வழங்கும் கடன்கள் தற்போது ஐந்து நாட்களுக்குள் வழங்கப்படுவதாகவும், அதேபோல் Bank Rakyat சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் ஒப்புதல் காலத்தை 14 நாட்களில் இருந்து ஆறு வேலை நாட்களாகக் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்முனைவோரின் வளர்ச்சியை ஊக்குவிக்க, கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, நிதியுதவி விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



