எங்கள் எல்லையைத் தாண்டினால் போர் - உளவு வேலைகளால் ஆத்திரமடைந்த கிம் ஜாங் உன்!
- Muthu Kumar
- 11 Jan, 2026
தென்கொரியா தனது உளவு ட்ரோன்களை அனுப்பி வடகொரியாவின் ராணுவ ரகசியங்களைத் திருடியதாகக் கூறி, கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரிய அரசு மிகக்கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.“இதற்காகத் தென்கொரியா ஈடுசெய்ய முடியாத விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என வடகொரிய ராணுவம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 4-ம் தேதி, தென்கொரியாவின் இஞ்சியோன் பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு நவீன உளவு ட்ரோன், வடகொரியாவின் வான் எல்லைக்குள் சுமார் 156 கிலோமீட்டர் தூரம் ஊடுருவியுள்ளது.சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வடகொரியாவின் முக்கிய ராணுவத் தளங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மேலே பறந்த அந்த ட்ரோன், அங்கிருந்த ரகசியக் கட்டமைப்புக்களைத் தனது கேமராக்கள் மூலம் படம் பிடித்துள்ளது.
வடகொரியாவின் எல்லையோர நகரமான ‘காய்சாங்’ (Kaesong) அருகே பறந்து கொண்டிருந்த இந்த ட்ரோனை, வடகொரிய ராணுவம் தனது சிறப்பு எலக்ட்ரானிக் போர் (Electronic Warfare) கருவிகள் மூலம் தாக்கி வீழ்த்தியது. அந்த ட்ரோனின் பாகங்களை ஆய்வு செய்தபோது, அதில் வடகொரியாவின் முக்கியமான ராணுவ நிலைகள் மற்றும் கட்டிடங்களின் புகைப்படங்கள் சேமிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டைத் தென்கொரியாவின் தற்காப்புத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. குறிப்பிட்ட தேதியில் நாங்கள் எந்த ட்ரோன்களையும் இயக்கவில்லை. வடகொரியா காட்டும் ட்ரோன் பாகங்கள் எங்களுடையது அல்ல. இது வெறும் நாடகமாக இருக்கலாம்,” எனத் தென்கொரியா தெரிவித்துள்ளது. இருப்பினும், தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய வடகொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர், “தென்கொரியா எங்களின் ‘மிக மோசமான எதிரி’ (Enemy Most Hostile). அவர்களின் இந்தத் துணிகரமான அத்துமீறலுக்குப் பதிலடியாக, தென்கொரியா ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். எங்கள் இறையாண்மையைச் சோதித்துப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மண்ணோடு மண்ணாவார்கள்.”
வடகொரியாவில் விரைவில் நடைபெறவுள்ள 9-வது கட்சி மாநாட்டிற்கு (9th Party Congress) முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் தென்கொரியாவை ஒரு ‘அந்நிய நாடாக’ மற்றும் ‘நிரந்தர எதிரியாக’ வடகொரிய அரசியலமைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கிம் ஜாங் உன் திட்டமிட்டுள்ளார்.
ட்ரோன் விவகாரத்தால் எல்லையில் இரு நாட்டு ராணுவங்களும் தற்போது தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



