கரூரில் உருட்டுக்கட்டைகளுடன் முகமூடி திருடர்கள்!

top-news
FREE WEBSITE AD

நள்ளிரவில் உருட்டுக் கட்டைகளுடன் முகமூடி அணிந்த திருடர்கள் சுற்றி வருவதால், திடீரென மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ, வீட்டுக்கு வெளியே இருக்கும் குழாய் திறக்கப்பட்டாலோ யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் அடிக்கடி சாரல் மழை, பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் வீட்டின் வெளிப்புறம், மொட்டை மாடிகளில் தூங்குவதை பலர் தவிர்த்துவிட்டு வீடுகளில் தூங்குகிறார்கள்.
இந்த நிலையில் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு முகமூடியுடன் உடலில் எண்ணெய் பூசிக் கொண்டு உருட்டுக் கட்டைகளுடன் கொள்ளையர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருக்கிறார்கள். உள்ளாடையின் பின்புறம் செருப்பை சொருகியுள்ளனர். அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை கரூர் அருகே வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரது வீட்டிற்குள் கொள்ளையர்கள் இருவர் புகுந்து ஒரு கிராம் தங்க மூக்குத்தியை திருடிச் சென்றனர்.

அது போல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை அரவக்குறிச்சி அருகே கொடையூர் கூலி நாயக்கனூர் பகுதியில் மாரப்பன் என்பவரது வீட்டில் 4 முகமூடி கொள்ளையர்கள் உருட்டுக் கட்டைகளுடன் புகுந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி வனிதா (38) அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

கரூர் மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். முகமூடி கொள்ளையர்கள் ஒரு வீட்டை நோட்டமிடும் வீடியோவும் வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.

அதில் ஒரு வீட்டிற்கு வரும் கொள்ளையர்கள் அந்த வீட்டின் கேட்டை ஆராய்கிறார்கள். டார்ச் அடித்து பார்க்கிறார்கள். பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறார்கள். மேற்கண்ட வீடுகளில் நகையை பறிகொடுத்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதில் "இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே யாரும் தூங்க வேண்டாம். கதவை யாராவது தட்டினால் திறக்க வேண்டாம்.திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ நாய் குரைத்தாலோ, வீட்டிற்கு வெளியே உள்ள குழாயில் தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டாலோ கதவை திறந்து வெளியே வர வேண்டாம்.வீட்டின் மேல் யாராவது கல் எறிந்தாலோ அல்லது வீட்டின் மாடியில் யாராவது ஓடும் சப்தம் கேட்டாலோ உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *