ஏமனில் குண்டுமழை பொழிந்த சவுதி அரேபியா.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிர்ச்சி!

top-news
FREE WEBSITE AD

நட்பு நாடுகளாக இருந்த சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்போது எதிரெதிர் துருவங்களாக மாறி உள்ளன. ஏமனை மையப்படுத்தி இருநாடுகள் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் போர் விமானங்கள் ஏமனுக்குள் நுழைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு படையினர் மீது குண்டு மழை பொழிந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் மோதல் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகிலேயே போருக்கு பெயர் பெற்ற பிராந்தியம் என்றால் அது மத்திய கிழக்கு தான். இங்கு ஏராளமான இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்நாட்டு போர் அல்லது இருநாடுகள் இடையேயான மோதல் என்பது அடிக்கடி நடந்து வருகிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், இஸ்ரேல் - லெபனான் மோதல் உள்ளிட்டவை இப்போது தான் முடிவடைந்துள்ளன.

இதற்கிடையே தான் தற்போது அடுத்தக்கட்டமாக பயங்கர மோதல் வெடித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் நல்ல நட்பு நாடுகளாக உள்ளன. ஆனால் இப்போது இருநாடுகளும் மோத தொடங்கி உள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஏமன் தான்.

இந்நிலையில் தான் நேற்று இரவு சவுதி அரேபியா மீண்டும் ஏமனில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு படைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஏமனில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவில் பிரிவினைப்படையாக எஸ்டிசி எனும் தெற்கு இடைக்கால கவுன்சில் என்ற கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை குறிவைத்து தான் சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி உள்ளது. சவுதி அரேபியாவின் விமானப்படை விமானங்கள் தெற்கு ஏமனில் நுழைந்து எஸ்டிசி படைகளை குறிவைத்து குண்டுமழை பொழிந்துள்ளது.

ஏமனில் உள்ள ஹத்ரமாவுத் மாகாணத்தில் ராணுவ நிலைகளை எஸ்டிசி மீண்டும் கைப்பற்ற முயன்ற நிலையில் இந்த வான்வெளி தாக்குதலை சவுதி அரேபியா நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக எஸ்டிசி அமைப்பின் முகமது அப்துல்மலிக் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டை எடுத்து கொண்டால் இரண்டு வகையான ஆட்சி நடக்கிறது. ஒன்று அதிபர் ரஷாத் அல் அலிமியின் ஆட்சி. இதுதான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சி. இவர் ஏடன் நகரை மையப்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு சவுதி அரேபியாவின் ஆதரவு உள்ளது. அதேவேளையில் ஏமனின் உண்மையான தலைநகராக உள்ள சனாவில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆதரவு உள்ளது.

இவர்கள் 2 பேர் தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவில் எஸ்டிசி என்ற கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அதிபர் ரஷாத் அல் அலிமியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பிடிக்க முயன்று வருகின்றன. இதனால் தான் சவுதி அரேபியா, எஸ்டிசி கிளர்ச்சியாளர்கள் மீது குண்டுமழை பொழிந்துள்ளது.

தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவில் செயல்பட்டு வரும் எஸ்டிசி பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேற தொடங்கி உள்ளனர். சவுதி அரேபியாவையொட்டி உள்ள ஏமனின் ஹத்ரமாவுத் மற்றும் மஹ்ரா பகுதிகளை சமீபத்தில் கைப்பற்றினர். இது சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

மேலும் அங்குள்ள ராணுவ முகாம்களை கைப்பற்றி எஸ்டிசி அமைப்பினர் கைப்பற்ற திட்டமிட்டுள்ள நிலையில் சவுதி அரேபியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி உள்ளது. எஸ்டிசி படையினர் ஹத்ரமாவுத் மற்றும் மஹ்ரா மாகாணங்களை விட்டு வெளியேறும் வரை சவுதி அரேபியா தனது தாக்குதலை நிறுத்தாது என்று அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *