புடி மடானி ரோன்95: 84 விழுக்காடு தகுதியுள்ள மலேசியர்கள் ரோன்95 பெட்ரோலைப் பயன்படுத்துகின்றனர்
- Tamil Malar (Reporter)
- 02 Dec, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், டிச. 2-
மலேசியாவில் தகுதியுள்ள 16.5 மில்லியன் பேரில் 13.9 மில்லியன் பேர் (84.4 விழுக்காடு) இதுவரை புடி மடானி ரோன்95 (BUDI95) திட்டத்தின் மூலம் ரோன்95 பெட்ரோலை ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற மலிவு விலையில் பயன்படுத்தியுள்ளதாக துணை நிதி அமைச்சர் லிம் ஹூய் யிங் தெரிவித்தார்.
நவம்பர் 30, 2025 வரையிலான கணக்கின்படி, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5.16 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2.59 பில்லியன் லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மேலவையில் இன்று நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தில் பேசிய அவர், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களைப் பொறுத்து, BUDI95 திட்டத்தால் அரசாங்கம் ஆண்டுக்கு 2.5 பில்லியன் முதல் 4 பில்லியன் வரை மானியச் செலவில் சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
இந்தச் சேமிப்பு மதிப்பீடு, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு அமெரிக்க டாலர் 60 முதல் 80 வரையிலான பல்வேறு சூழல்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டவர்கள், வணிகப் பயன்பாட்டாளர்கள் போன்ற இலக்கு குழுவல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களை நீக்கியதன் மூலமும் இந்தச் சேமிப்பு சாத்தியமாகியுள்ளது என்று லிம் ஹூய் யிங் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



