வீட்டுத் தோட்டம் மட்டும் உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைக்கு தீர்வு அல்ல – வான் சைபுல்
- Surendran Sumdraraj
- 15 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 15-
விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் (KPKM) ஊழியர்கள் தங்களது வீடுகளில் காய்கறி பயிரிட வேண்டும் என்ற பரிந்துரை, நாட்டின் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு முழுமையான தீர்வாகாது என்று தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் தெரிவித்துள்ளார்.
மக்களை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிப்பது நல்ல முயற்சியாக இருந்தாலும், உலகளாவிய உணவுப் பற்றாக்குறை மற்றும் வழங்கல் சிக்கல்களை எதிர்கொள்ள இது போதுமான பதிலாக இருக்காது என்று அவர் கூறினார்.
அவரின் கருத்துப்படி, மலேசியாவின் உணவுப் பாதுகாப்பு பிரச்சினை மிகவும் பெரியது. நாடு இன்னும் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், வீட்டுத் தோட்டங்களில் சிறிய அளவில் பயிரிடப்படும் காய்கறிகள் தனிப்பட்ட தேவைக்கு உதவினாலும், அது நாட்டின் மொத்த உணவு வழங்கலுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் விளக்கினார்.
முன்னதாக, அமைச்சரவை சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது சாபு, நிலம் உள்ள வீடுகளில் வசிக்கும் அமைச்சின் அதிகாரிகள் விரைவாக விளைச்சல் தரும் பயிர்களை வளர்க்கத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



