பலூன் வெடித்து இரு MBPP அதிகாரிகள் காயம்
- Tamil Malar (Reporter)
- 02 Feb, 2026
ஜார்ஜ்டவுன், பிப். 2-
தைப்பூச விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத வணிகர் ஒழிப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பலூன் திடீரென வெடித்து தீப்பற்றியதில், பினாங்கு நகராண்மையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம், லெபூ யூனியனில் அமைந்துள்ள MBPP உரிமம் வழங்கும் பிரிவின் தலைமையகத்தில் நேற்று இரவு நிகழ்ந்தது. அந்த நேரத்தில், அமலாக்க நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பலூன்களை MBPP பிக்கப் வாகனத்திலிருந்து அதிகாரிகள் இறக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பலூன் வெடித்து தீப்பற்றியது.
தகவலின்படி, குறித்த பலூன்கள், ஜாலான் கெபுன் புங்கா பகுதியில் இரவு சுமார் 10.45 மணியளவில் நடைபெற்ற நடவடிக்கையின் போது, வணிக அனுமதி இல்லாமல் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்ட, வெளிநாட்டு குடிமகன் என சந்தேகிக்கப்படும் ஒரு வியாபாரியிடமிருந்து கைப்பற்றப்பட்டவை. பின்னர் அவை MBPP வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், குறைந்த செலவிலும் எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி அந்த பலூன்கள் நிரப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஹீலியம் வாயுவை விட ஹைட்ரஜன் அதிக ஆபத்தானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



