தாமான் பைடூரியில் வீடு புகுந்து திருடிய கொள்ளையனை தேடும் நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், அக்.22-

இங்கு, தாமான் பைடூரி மக்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து ரொக்கப் பணம், விலையுயர்ந்த பொருட்களைத் திருடி தப்பித்து தலைமறைவான கொள்ளையனை வலை வீசி தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் பந்திங் காவல் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிரப்படுத்தி வருவதாக கோலலங்காட் மாவட்ட தலைமையகத்தின் போலீஸ் படைத் தலைவர் சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் ரட்சி தெரிவித்தார்.

கடந்த 15.10.2025 தேதி எண்.1, ஜாலான் 18 எனும் முகவரியில் வசித்து வரும் இதே குடியிருப்பைச் சேர்ந்தவர் என அறியப்படும் நபர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையின் போது, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மறைக்காணியில், கறுப்பு நிற உடையணிந்த தோற்றத்தில் தலையில் சிவப்பு நிற கவசத் தொப்பியுடன் கொள்ளையன் வீட்டினுள் பிரவேசித்திருப்பது படக் காட்சி வழி தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.

வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவத்தில் 3 ஆயிரம் ரிங்கிட் வரை அந்தக் குடியிருப்பாளர் இழந்துள்ளது புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் தெரிவித்தார். போலீஸ் சட்டம் 457 இன் கீழ் குற்றப் பதிவேடுகள் திறக்கப்பட்டு உள்ளதோடு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் தேடல் நடவடிக்கையில் சிக்கும் கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

இது குறித்து பொதுமக்கள் மத்தியில் தகவல் ஏதும் கிடைத்தால் 03 31872222 என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளும்படி சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *