பேருந்துகளில் இருக்கைப் பட்டை அமலாக்கம் விரிவுபடுத்தப்படும்!
- Muthu Kumar
- 21 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 21-
உயர் கல்விக் கழகம் மற்றும் தங்கும் வசதி கொண்ட பள்ளிகளுக்குச் சொந்தமான அனைத்து பேருந்துகளிலும் இருக்கைப் பட்டை அமலாக்கத்தை விரிவுபடுத்த சாலைப் போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்பில், உயர் கல்விக் கழகம் மற்றும் கல்விக் கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளைப் பரிசோதிக்க ஆகஸ்ட் மாதம் தொடங்கி மாநில ஜேபிஜே தொழில்நுட்ப மற்றும் அமலாக்கக் குழுக்கள் அக்கழகங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பதாக, ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
பெரும்பாலும் அனைத்து உயர் கல்வி கழகங்களுக்கும் முழு தங்கும் விடுதி கொண்ட பள்ளிகளுக்கும் தங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் உள்ளன.அவை, நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களின்படி இருப்பதையும் அவற்றின் ஓட்டுநர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதையும் தங்கள் தரப்பு உறுதி செய்ய விருப்பதாக ஏடி ஃபட்லி குறிப்பிட்டார்.
அதேவேளையில், ஜேபிஜே பணியாளர்களின் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு, சோதனை நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
பகாங்கின் குவாந்தானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், நேற்று நடைபெற்ற மைலேசன் (பி2) திட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமத்தை வழங்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது ஏடி ஃபட்லி அவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில், மைலேசன் (பி2) திட்டத்தில் பங்கேற்பவர்கள் சட்டவிரோத மோட்டார் பந்தயம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் வாகன உரிமங்களை இடைநிறுத்த அல்லது ரத்து செய்வதற்கான ஒரு முறையை தங்கள் தரப்பு தற்போது வகுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



