சீமான் பேசியது சரிதானே! அப்போ ஏன் விஜய் ஆதரிக்கவில்லை?-பிரேமலதா!
- Muthu Kumar
- 25 Aug, 2025
மதுரை மாநாட்டில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில மாநாட்டில் தலைவர் விஜய் பேசிய உரை, இப்போது தமிழக திமுக, பாஜக ஆகியவற்றை வழக்கம்போல் விமர்சித்த விஜய், இந்த முறை அதிமுகவையும் ஊழல் கட்சி என மறைமுகமாக தாக்கினார்.
மேலும், தனது உரையில் பிரதமர் மோடியை "மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்", முதல்வர் ஸ்டாலினை "அங்கிள் ஸ்டாலின்" எனக் குறிப்பிட்டார். இதற்கு பாஜகவும், திமுகவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதேசமயம், அதிமுக மூத்த தலைவர்களும் தங்கள் கட்சியை விமர்சித்ததற்காக விஜய்யை கண்டித்துள்ளனர்.
மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக, விஜய் எம்.ஜி.ஆர் மற்றும் விஜயகாந்தை உயர்த்திப் புகழ்ந்தார்."என் சினிமா தலைவரும் அரசியல் தலைவரும் எம்.ஜி.ஆர் தான். அவருடன் பழக முடியவில்லை. ஆனால் கருப்பு எம்.ஜி.ஆர் என் அண்ணன் - புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது" என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,"விஜய், விஜயகாந்தை அண்ணன் என அழைத்தது அவரது விருப்பம். எங்கள் குடும்பத்தில் அவர் ஒருவர். எங்களுக்கு அவர் தம்பி," என்று மென்மையான பதில் அளித்தார்.
ஆனால், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வேறு கருத்தைத் தெரிவித்தார்."விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது விஜய் ஆதரவு தரவில்லை. அவர் உடல்நலம் குன்றியபோது கூட நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால் இப்போது அரசியலுக்காக மட்டும் 'அண்ணன்' என சொல்கிறார். இது அரசியல் கணக்கு பண்ணுதல்தான்," என்று சீமான் விமர்சித்தார்.
இதற்கு மீண்டும் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது, பிரேமலதா,"சகோதரர் சீமான் சொன்னது உலகம் அறிந்த உண்மை. அந்த உண்மையை அவர் உரைக்க சொல்லி இருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை விஜய் தம்பிதான்," என்று பதிலளித்தார்.
தொடர்ந்து,"விஜயகாந்துக்கு நிகர் அவரே தான். அவரைப் போல யாரும் மாற முடியாது. கேப்டனின் பெயர், படங்களை தனது அரசியலுக்காக விஜய் பயன்படுத்தினால், அது தேமுதிகவினராலும், மக்களாலும் ஏற்கப்படாது. உண்மையான அன்பின் வெளிப்பாடாக 'அண்ணன்' எனக் கூறியிருந்தால் சரி. ஆனால் அரசியலுக்காகக் கூறினால் அது தவறு," என்றும் அவர் எச்சரித்தார்.
முதலில் விஜய்யை பாராட்டியது போல இருந்த பிரேமலதா, திடீரென சீமான் கருத்தை ஏற்றுக்கொண்டு அதிரடி பதில் அளித்தது, தவெக தொண்டர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



