'மைடிஜிட்டல்' பதிவை கட்டாயமாக்கும் சட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது!
- Muthu Kumar
- 22 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 22-
மிகவும் திறமையான, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த இலக்கவியல் சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய மக்களிடையே மைடிஜிட்டல் ஐடி பதிவை கட்டாயமாக்குவது உட்பட ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனும் அச்சத்தை இந்த பரிந்துரை கவனத்தில் கொண்டாலும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.
"எனவே, மக்கள் மைடிஜிட்டல் ஐடி பதிவு செய்வதை ஊக்குவிக்க ஒரு சட்டத்தை உருவாக்கும் சாத்தியக் கூறுகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மேலும் மைடிஜிட்டல் ஐடியின் பயன்பாட்டை அதிகரிக்கத் தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளையும் மேற்கொண்டுள்ளோம்" என்றார் அவர்.
நேற்றைய மக்களவை கூட்டத்தில் மைடிஜிட்டல் ஐடி குறித்து பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரொனால்ட் கியான்டி எழுப்பிய கூடுதல் கேள்விக்கு டாக்டர் சலிஹா அவ்வாறு பதிலளித்தார்.கைரேகை தொழில்நுட்பத்தை மைடிஜிட்டல் ஐடி பயன்படுத்தவதாகவும் தகவல் கசிவு அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க, மைடிஜிட்டல் ஐடி பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சேமிக்காது என்றும் டாக்டர் சலிஹா குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் 35 செயலிகள் கொண்ட அமைப்பு, அரசு சாரா இயக்கங்களின் ஏழு அமைப்பு என மொத்தம் 82 அமைப்புகள் மைடிஜிட்டல் ஐடியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



