சிலாங்கூரில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 8.4 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல்!
- Muthu Kumar
- 04 Oct, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
ஷா ஆலம், அக்.4
மாநில ரீதியில் சிப்பாங் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையம், சபாக் பெர்ணம் மற்றும் காஜாங் வட்டாரங்களில் சிலாங்கூர் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைக்குழு போலீசார் ஒரு குழுவாக மேற்கொண்ட அதிரடிப் பரிசோதனையின் போது உள்ளூர் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களும் அந்நிய நாட்டினரும் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களிடமிருந்து 8.4 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததாக சிலாங்கூர் போலீஸ் உயர்நிலை அதிகாரி டத்தோ பஹ்லவான் ஷஸேலி காஹார் தெரிவித்தார். போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் செய்து வரும் இந்தக் கும்பலிடம் இருந்து 106 கிலோ கிராம் போதைப் பொருட்களை போலீசார் மீட்டதாக அவர் கூறினார்.
இந்தப் பறிமுதல் நடவடிக்கையின் போது 63.7 கிலோ கெத்தாமின், 27.7 கிலோ எக்ஸ்டசி, 12.3 கிலோ கஞ்சா மற்றும் 2.5 கிலோ ஷாபு வகை போதைப் பொருட்களை மீட்டதோடு கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த 42 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள வெள்ளை நிற வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ பஹ்லவான் செய்தியாளர்கள் சந்திப்பில் ஷஸேலி தெரிவித்தார்.
கடத்தப்பட்டு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஏறக்குறைய 3 லட்சத்து 50 ஆயிரம் போதைப் பித்தர்கள் பயன்படுத்தக் கூடிய அளவில் பொட்டலமிடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அனைத்தும் போலீசாரால் மீட்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக
அவர் கூறினார். 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் கடத்தல் சட்டம் 398 இன் கீழ் தற்போது விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருவதாக பஹ்லவான் ஷஸேலி கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் டிசிபி முகமட் ஸைய்னி. அபாயகரமான போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குழு அதிகாரி ஏசிபி முகமட் ஃபைசால் முகமட் நோர், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குழு துணைத் தலைவர் சூப்ரிண்டன் தான் யோங் வீ, காஜாங் போலீஸ் நிலையத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப், சபாக் பெர்ணம் போலீஸ் நிலையத் தலைவர் சூப்ரிண்டன் மாட் யூசோப் அமாட் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலைய போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷாரியாட் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



