இந்து கோயிலை இழிவாகப் பேசுவதா?! உடனடி நடவடிக்கை தேவை! - RSN ராயர் அரசுக்கு கோரிக்கை
- Shan Siva
- 21 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 21: இந்து கோயில் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெறுப்பூட்டும் பதிவுகள் செய்ததாக கூறி, சமய போதகர் ஃபிர்டாவுஸ் வோங் மற்றும் டிக்டாக் பயனர் ‘சிகு சந்திரா’ ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றுடிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ராயர் வெளியிட்ட அறிக்கையில், மாமன்னர் பேசியது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒரு பத்திரிகையாளர்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், இந்த இருவர்மீதும் அதே வேகத்திலும் உறுதியுடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டில் அமைதியும் இன ஒற்றுமையும் நிலைக்க வேண்டும் என்றால், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.
நேற்றுமுன் தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இனத் தகராறு மற்றும் சமூக ஒற்றுமையை பாதிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று மக்களுக்குக் கேட்டுக்கொண்டதாகவும் ராயர் நினைவூட்டினார்.
அரசரின் அறிவுறுத்தலுக்குப் பிறகு 24 மணி நேரத்துக்குள்,ஃபிர்டாவுஸ் வோங் மற்றும் ‘சிகு சந்திரா’ போன்றோர் அந்த அறிவுறுத்தலை மீறி நடந்து கொண்டுள்ளனர் என்றும் ராயர் குற்றம்சாட்டினார்.
ஒரு மின்சார பரிமாற்ற கோபுரம் இந்து கோவில் நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய ஃபிர்தவுஸ் வோங், மின்சார நிறுவனம் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா என்று அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், கோவிலிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெறப்படுகிறதா என்றும் சந்தேகம் எழுப்பினார். அதே நேரத்தில், ‘சகு சந்திரா' முதலில் வந்தது எது?” என்ற கேள்வியை முன்வைத்து சர்ச்சையை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த பதிவுகள் அமைதியைக் குலைக்கும் அபாயம் உள்ளதாகக் கூறிய ராயர், அதிகாரிகள் உடனடியாகச் சம்பந்தப்பட்ட பதிவுகளை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



