ஈரானில் கொத்துக் கொத்தாகச் செத்து விழும் மக்கள்!
- Muthu Kumar
- 04 Mar, 2026
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் ஈரானின் முக்கியப் பகுதிகளையும், அந்நாட்டின் அணுசக்தி மையமாகக் கருதப்படும் நடான்ஸ் (Natanz) ஆலையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதல் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் மறைவுக்குப் பிறகு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஈரானின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் குழப்பமும், பதற்றமும் நிலவி வருகிறது.
மறுபுறம், இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மினாப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165 மாணவிகள் கொல்லப்பட்டது உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பிஞ்சுக் குழந்தைகளை ஒரே இடத்தில் புதைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
இந்தத் தொடர் மோதல்களால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர்ப் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தலைவர்களையும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் குறிவைத்துத் தாக்கி வருகிறது. இந்தச் சூழலில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் சுமார் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் ராஜதந்திர ரீதியாகப் பேசி வருகிறார். இந்த விவகாரம் தற்போது உலகப் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



