நீதித்துறை பதவி நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்புகள் வெளியே கசிந்ததா? பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

ஷாஆலம், ஜூலை 14-

நீதித்துறை பதவி நியமன ஆணையத்தின் (ஜேஏசி) கூட்டக் குறிப்புகள் அண்மையில் வெளியே கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கமளிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது. அக்குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில், நீதித்துறையின் நேர்மைக்கும் பிரதமர் பதவிக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அமாட் ஃபாட்லி ஷாரி நேற்று எச்சரித்தார்.

இந்த விவகாரம் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டியது பிரதமரின் கடமையாகும் என்று தமது முகநூல் பக்கத்தில் அவர் வலியுறுத்தினார். மே மாதம் நடைபெற்ற ஜேஏசி கூட்டத்தின் குறிப்புகள் எனக் கூறப்படும் சில தகவல்கள் முன்னதாக சமூக ஊடகத்தில் வெளியாகியிருந்தது. நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரம் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அத்தகவல் அமைந்திருந்தன.

நீதித்துறையைக் கீழறுக்கும் வகையில் எவர் நடந்து கொண்டாலும், பாரபட்சம் இல்லாமல் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஃபாட்லி கூறினார். நீதித்துறை உறுப்பினர்கள் குறிப்பாக மூத்த நீதிபதிகள் நீதித்துறையைக் கீழறுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, கூட்டக் குறிப்புகளில் காணப்படும் குற்றச்சாட்டுகள் பிரதமர் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் சீர்குலைத்துள்ளது என்று பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் ஃபைஸால் இஸ்மாயில் அஸிஸ் சுட்டிக் காட்டினார்.ஜேஏசி கூட்டக் குறிப்புகள் வெளியே கசிந்திருக்கும் விவகாரம் குறித்து சுயேச்சையான, வெளிப்படையான புலன்விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் துன் ஃபைஸால் கோரிக்கை விடுத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *