வெற்றிமாறனின் திடீர் அறிவிப்பால் திரையுலகினர் அதிர்ச்சி!
- Muthu Kumar
- 02 Sep, 2025
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் படங்களுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது.
சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வந்தது. இந்நிலையில் தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபடுவது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
சித்தார்த்த் நடிப்பில் வெளியான உதயம் NH4 படத்தின் வாயிலாக தயாரிப்பாளர் ஆனார் வெற்றிமாறன். தொடர்ந்து பொறியாளன், காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில் தனது உதவியாளரான வர்ஷா பாரத் இயக்கியுள்ள 'பேட் கேர்ள்' படத்தினை வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்படத்துடைய டீசர் வெளியான சமயத்திலே பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. இதனிடையில் வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகியுள்ள மனுசி படமும் சர்ச்சைகளில் சிக்கி ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த தொடர் அழுத்தங்கள் காரணமாக தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போவதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய வெற்றிமாறன் இயக்குனராக இருப்பதில் கிடைக்கும் சுதந்திரம் தயாரிப்பில் கிடையாது. படத் தயாரிப்பு என்பது என்னை மாதிரி இருப்பவர்களுக்கு மிகவும் சவாலான விஷயம். இதற்கு முன்பாக நான் தயாரித்த தணிக்கை, மற்றும் இரண்டு தடவை மறு தணிக்கை செய்யப்பட்டும் நீதிமன்றத்துக்கு சென்று வந்துள்ளது. தயாரிப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நான் பெரிய தயாரிப்பாளர் கிடையாது.
சில இடங்களில் கடன் வாங்கி தான் படம் எடுக்கிறோம். இதனால் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கடைசிப் படமாக 'பேட் கேர்ள்' இருக்கும் என முடிவு எடுத்திருக்கிறோம். இதற்கு மேல் தயாரிப்பில் ஈடுபட போவதில்லை. கடையை இழுத்து மூடுகிறோம். இவ்வாறு பேசியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். அவரின் இந்த திடீர் முடிவு திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் இடையிலும் பேசுப்பொருளாகி உள்ளது. சென்சாரில் சந்தித்த அழுத்தங்களே வெற்றிமாறனின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அதோடு இதுபோன்ற சம்பவங்களால் சினிமாவின் சுதந்திரத்தை பாதிக்கும். பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என பல விவாதங்கள் இணையத்தில் வெடித்துள்ளது. இதே போல் தனது தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான மனுசிக்கு சென்சார் வழங்க உத்தரவிடுமாறு இயக்குனர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட இந்த வழக்கும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் 'மனுசி' படமும் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



