சபரிமலையில் குவியும் பக்தர்கள் - தரிசன நேரம் நீட்டிப்பு!
- Muthu Kumar
- 11 Dec, 2025
சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தரிசன நேரத்தை கோவில் தேவசம் வாரியம் நீட்டித்துள்ளது.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 25 நாள்களை கடந்துள்ள நிலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சாமி தாரிசனம் செய்வதற்காக நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில் தந்திரிகளுடன் காவல்துறை மற்றும் தேவசம் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோவில் சன்னிதானம் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கும் அடைக்கப்படும். தற்போது பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் முடிவுபெற்று அதிகளவிலான குழந்தைகளுடன் பக்தர்கள் சபரிமலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சபரிமலைக்கு பெருவழியில் வருவோர் எரிமேலி - பம்பை, சாலக்கயம் - பம்பை, புல்மேடு - சன்னிதானம் ஆகிய மூன்று வழிகளை பயன்படுத்துவர். புல்மேடு - சன்னிதானம் பாதை என்பது மற்ற இருவழிகள் போல் செங்குத்தான ஏற்றம் கொண்ட பாதையாக அல்லாமல், செங்குத்தான இறக்கம் ஆகும். ஆகையால், இந்தாண்டு அதிகளவிலான பக்தர்கள் இந்த பாதையில் சன்னிதானத்துக்கு வருகின்றனர்.
இந்த நிலையில், புல்மேடு வழித்தடத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும், இந்த வழியைப் பயன்படுத்துவோர் உரக்குழி அருவி பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



