புதின் தலைக்கு மேல் பறந்த அமெரிக்க போர் விமானங்கள்!

top-news
FREE WEBSITE AD

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவில் உள்ள அலஸ்காவில் டொனால்ட் டிரம்பை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அலஸ்காவில் 'லேண்டிங்' ஆன விமானத்தில் இருந்து விளாடிமிர் புதின் தரையிறங்கியதும் அவரது தலைக்கு மேல் திடீரென்று அமெரிக்காவின் பி 2 ஸ்டெல்த் பாம்பர் உள்பட 5 போர் விமானங்கள் பறந்தது. இதில் லேசாக திடுக்கிட்ட புதின் வானை நோக்கி பார்த்த நிலையில் கைகளை தட்டி அவரது காதில் டிரம்ப் சொன்ன தகவல் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவும், புதினிடம் தொலைபேசியிலும் டிரம்ப் பேசி வந்தார்.

இந்நிலையில் தான் உக்ரைன் போருக்கு பிறகு நேற்று முதல் முதலாக டிரம்ப் - விளாடிமிர் புதின் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் இருவரும் சந்தித்தனர்.

ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் வந்திறங்கிய புதினுக்கு, டிரம்ப் உற்சாக வரவேற்பு வழங்கினார். புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. சிவப்பு கம்பளத்தில் ஒரு புறத்தில் டொனால்ட் டிரம்பும், மறுபுறம் விளாடிமிர் புதினும் நடந்து வந்தனர். மையப்பகுதிக்கு முதலில் வந்த டிரம்ப், புதினுக்காக காத்திருந்தார். புதின் பக்கத்தில் வந்தவுடன் அவரிடம் டிரம்ப் கைக்குலுக்கினார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

பிறகு இருவரும் விமான தளத்தில் உள்ள மேடையை நோக்கி சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றனர். அப்போது வானில் போர் விமானங்கள் பறக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட புதின் ஒரு நிமிடம் திடுக்கிட்டார். நேராக அவர் வானத்தை நோக்கி பார்த்தார். அப்போது உலகிலேயே சக்தி வாய்ந்த பி2 பாம்பர்ஸ் (B2 Bomber) போர் விமானங்கள் எஃப் 22 ரக போர் விமானங்கள் என மொத்தம் 5 போர் விமானங்கள் பறந்தன. புதினுடன் சேர்ந்து டிரம்பும் பார்த்தார்.

இருப்பினும் புதின் மீண்டும் மீண்டும் போர் விமானம் செல்லும் திசையை நோக்கி பார்த்து கொண்டிருந்தார். அப்போது புதினுக்கு பின்னால் நடந்து வந்த டிரம்ப், மேலே பார்த்து கை தட்டினார். அதோடு புதினின் காது அருகே சென்று உங்களுக்கு தான் இந்த வரவேற்பு என்று கூறினார். அதனை கேட்டு புதின் பூரிப்படைந்தார்

உலகிலேயே சக்தி வாய்ந்த போர் விமானங்கள் என்றால், அது பி2 பாம்பர்ஸ் தான். ஏவுகணைகள், அணு ஆயுதங்கள், சக்தி வாய்ந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் என சக்தி வாய்ந்த ஆயுதங்களை சுமந்து சென்று வீசக்கூடியது. இடைவிடாமல் 11,112 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் சக்தி கொண்டது. ஒரே நேரத்தில் 18,144 கிலோ வெடிபொருட்களை சுமந்து சென்று அட்டாக் செய்யும். எதிரி நாட்டின் ராடாரில் இருந்து எளிதில் தப்பித்து விடும்.

உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும் வல்லமை பி2 பாம்பர் போர் விமானத்துக்கு உண்டு. சமீபத்தில், இஸ்ரேல், ஈரான் போரின் போது இந்த போர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. ஜிபியு-57ஏ என்ற பங்கர் பஸ்டர் குண்டுகளை சுமந்து சென்று ஈரானில் பூமிக்கடியில் அமைக்கப்பட்டு இருந்த அணுசக்தி நிலையத்தின் மீது போட்டு அழித்தது. இப்படியொரு சூழலில் தான் ரஷ்ய அதிபர் புதினை வரவேற்கவும், தங்கள் வலிமையை காட்டவும் பி2 பாம்பர்ஸ் போர் விமானங்களை அமெரிக்கா பறக்கவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *