சீனர்களின் வாக்குகளைப் பெறுவதில் அப்டாலின் வாரிசான் கட்சி பிரச்சினையை எதிர்நோக்கும்!
- Muthu Kumar
- 16 Aug, 2025
கோத்தாகினபாலு, ஆக. 16-
சபா மாநிலத்தை முன்பு ஆட்சி புரிந்தபோது எடுக்கப்பட்ட, மக்கள் விரும்பாத பல முடிவுகளால், சபாவில் உள்ள சீன வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் வாரிசான் கட்சி சிரமத்தை எதிர்நோக்கக் கூடும்.
மாநில பொதுச் சேவை இலாகாவில் சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே சலுகைகளை காட்டியதோடு, அவர்களுக்குச் சாதகமாக வாரிசான் கட்சித் தலைமையிலான அப்போதைய மாநில அரசாங்கம் செயல்பட்டதும் இதற்கு ஒரு காரணமாக அமையும் என்று, அக்கட்சியின் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவி நோராஸ்லினா அரிஃப் கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் மாநில முதலமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ ஷாஃபி அப்டாலின் தலைமைத்துவத்துடன், குறிப்பாக மாநில இலாகாக்கள் தலைவர்கள் நியமனங்களில் உள் அதிருப்தி நிலவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தை ஆட்சி புரிந்தபோது, "ஒற்றுமை" என்ற தனது சொந்த சுலோகத்தை நிலைநாட்டுவதிலும் வாரிசான் தோல்வி கண்டதாகவும் மாநில இலாகாக்களின் மூத்த பதவிகளில் பரவலாக “உறவுக்காரர்களை நியமிக்க அனுமதிக்கப்பட்டதாகவும், குனாக் சட்டமன்ற உறுப்பினருமான நோராஸ்லினா கூறியுள்ளார். "இதனால், சபாவுக்காக வாரிசான் இனியும் போராடவேண்டியதில்லை என்று சீனர்கள் மட்டுமல்ல இதர இன மக்களும் கருதுகின்றனர்" என்று எஃப்எம்டியிடம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானிலிருந்து விலகி 15ஆவது பொதுத் தேர்தலை தனியாகச் சந்திப்பது என்ற கட்சியின் அப்போதைய முடிவு, சீன வாக்காளர்களுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தியதாக, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வாரிசான் கட்சியிலிருந்து விலகிய நோராஸ்லினா தெரிவித்தார்.அத்தேர்தலில் வாரிசான் கட்சி தன் வசமிருந்த பெனம்பாங் மற்றும் செபங்கார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பானிடம் பறிகொடுத்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



