ம.இ.கா பாரிசானிலிருந்து விலகினால் பாரிசானுக்கு பாதிப்பில்லை!
- Shan Siva
- 23 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 23: மஇகா பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் இணையுமானால், அது பாரிசான் நேஷனல் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியர் டாக்டர் சியாசா ஷுக்ரி கூறுகையில், மஇகா BN-இலிருந்து விலகுவது தேர்தல் இயந்திர ரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், குறியீட்டு (symbolic) ரீதியில் அது முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
BN தன்னை ஒரு பல்லினக் கூட்டணியாகக் காட்ட முயல்கிறது. மஇகா இல்லாத நிலை, மலாய் அல்லாத சமூகங்களுக்கு பாரிசான் மீது நம்பிக்கை குறைந்துவிட்டதைக் காட்டும் சைகையாக இருக்கும் என அவர் theSun நாளிதழில் தெரிவித்துள்ளார்.
மேலும், மதானி அரசில் Pakatan Harapan உடன் BN இணைந்து செயல்படுவது, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய சமூகத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்ற எண்ணமே பெரிகாத்தானுக்கு மஇகா நகர்வதற்கான காரணமாக மஇகா முன்வைக்கலாம் என்றும் அவர் கூறினார்.
PAS உடன் மஇகா இணைந்து செயல்படுவதில் பெரிய தடைகள் இருக்காது என்றும் டாக்டர் சியாசா ஷுக்ரி கருத்து தெரிவித்தார்.
சீன சமூகத்தைப் போல அல்லாமல், இந்திய சமூகம் PAS குறித்து அதிக எதிர்மறை மனநிலையைக் கொண்டிருக்கவில்லை. PAS பொதுவாக DAP-ஐ இலக்காக்குகிறது; இந்திய சமூகத்தை அல்ல. ஆனால், முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை PAS எவ்வளவு நம்பிக்கையுடன் உறுதி செய்யும் என்பதில்தான் இது சார்ந்துள்ளது என்றார்.
இதற்கிடையில், நுசந்தாரா அகாடமி அரசியல் ஆய்வாளர் டாக்டர் அஸ்மி ஹசான், மஇகா பாரிசானிலிருந்து விலகினால், அது அம்னோவிற்கு கூடுதல் தொகுதிகளைப் போட்டியிட வழிவகுக்கும் என்றார்.
மஇகா தற்போது வைத்திருக்கும் தொகுதிகளையே அம்னோ கிளைகள் கோருகின்றன. ஏனெனில், அந்தத் தொகுதிகளில் மஇகா ஆதரவாளர்களை விட அம்னோ ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதுஎன்றார்.
இந்த நிலைமையில், மஇகா வெளியேறுவது பாரிசானைப் பலவீனப்படுத்தாது. மாறாக, மஇகா வைத்திருந்த தொகுதிகளில் அம்னோ நேரடியாகப் போட்டியிட முடியும் என்றும் அவர் கூறினார்.
15வது பொதுத் தேர்தலில் மஇகா, சுங்கை சிப்புட், தாப்பா, உலு சிலாங்கூர், தெலுக் இந்தான், படாங் செராய், பத்து, கோலா லாங்காட், போர்ட் டிக்சன், கோத்தா ராஜா, சிகாமட் உள்ளிட்ட 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால், மஇகா துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வென்ற தாப்பா தொகுதியே அந்தக் கட்சிக்கு கிடைத்த ஒரே வெற்றியாக இருந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



