AI வாத்தியார்!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் மைண்ட் ஆப்ஸ் எனும் நிறுவனத்தின்  இ டியூஷன் வகுப்புக்கான  அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு பள்ளி மேலாளர் வாரியத் தலைவரும், ஓம்ஸ் அறவாரியத் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை புரிந்தார்.

இணையம் வழி மாணவர்களுக்கான வகுப்புகள், பயிற்சிகள், தேர்வுகள், உரையாடல்கள் என அனைத்து வசதிகளோடும் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைண்ட் ஆப்ஸ் செயலி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும் என்று அதன் நிறுவனர் தினேஷ் குமார் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் மூலம் மலேசிய பாடத்திட்டங்களைப் புகுத்தி புதிதாக குரு ஏ ஐ என ஒரு மெய்நிகர் ரோபோவை உருவாக்கியிருப்பதாகவும், மாணவர்களுக்கு இந்த AI வாத்தியாரான குரு ஏ ஐ பயனாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பள்ளியின் சுமார்  300 மாணவர்களுக்கு இலவசமாக இந்த இ டியூசன் வகுப்புகளை நடத்த மைண்ட் ஆப்ஸ் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாகராஜா சின்னையா தெரிவித்தார்.

ஒரு காலத்தில் பள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பிறகு பிரத்தியேக வகுப்புகள் இருக்கும். ஆனால், இப்போது அவை இல்லை. எனவே, அது மாதிரியான சூழலில் இதுபோன்ற இ டியூஷன் வகுப்புகள் மாணவர்களுக்குப் பயனாக அமையும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் செல்வநாதன் முனியாண்டி கூறினார்.

மாணவர்களுக்காக இலவசமாக இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு மென்மேலும் தங்கள் கல்வியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார். சிறப்பான ஏற்பாட்டினை செய்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும், ஆசிரியர்களுக்கும், மைண்ட் ஆப்ஸ் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கும் அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *