கூவத்தூரில் என்ன நடந்தது -எடப்பாடி முதல்வரானது எப்படி? டிடிவி தினகரன்!

top-news
FREE WEBSITE AD

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.எடப்பாடி பழனிசாமிக்கு பொய்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், கூவத்தூரில் என்ன நடந்தது.. எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படிக் காப்பாற்றப்பட்டது என்பது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாக அமைதி நிலவி வந்த சூழலில், அங்கு இப்போது மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது. கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் எனச் சொல்லி செங்கோட்டையன், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் தொடர்ச்சியாக எடப்பாடியை விமர்சித்து வருகிறார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கூவத்தூரில் நடந்த சில விஷயங்கள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "சாத்தான் வேதம் ஓதுவது போல நன்றியைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழக மக்களும் முட்டாள் என நினைத்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி, நன்றியைப் பற்றிப் பேசுகிறார்.

ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க முற்பட்ட போது பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பேசுகிறார். அதுவே தவறு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். அவருக்குப் பதிலாக சசிகலாவை முதல்வராக்க எம்எல்ஏக்கள் அனைவரும் முடிவு செய்து, கவர்னரிடம் மனு கொடுத்தார்கள். அப்போது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது, இவரைக் காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் தான்.

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்து தான் எடப்பாடி முதல்வராகக் காரணம். அப்போது கூட நான்தான் முதல்வர் எனச் சொன்னால் எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட மாட்டார்கள்.. கையெழுத்துகளை வாங்கிய பிறகு அதைச் சொல்லுங்கள் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.

அதன் பிறகு சசிகலா சிறைக்குச் சென்றபோது, 122 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் வெளியேற இருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் என்பது அவருக்கே தெரியும். எடப்பாடியை எல்லாம் முதல்வரா ஏற்க முடியாது எனச் சொல்லி பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். செம்மலை எல்லாம் சுவர் எகிறிக் குதித்து ஓடினார். அவர்களை எல்லாம் பாதுகாத்து வைத்து, அவர்கள் வாக்களித்ததாலேயே எடப்பாடியால் முதல்வராக முடிந்தது. ஆனால், அந்த நன்றியை எல்லாம் மறந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி" என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *