என் மகளாக இருந்தால் எப்படி இருக்கும்? பரவிய பெண் வழக்கறிஞரின் காணொளி. கண் கலங்கிய நீதிபதி!

top-news
FREE WEBSITE AD

இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் காணொளிகளை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உத்தரவு பிறப்பிக்கும்போது கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டது, கோர்ட் ரூமில் இருந்தவர்களையும் கலங்கச் செய்தது.

சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியில் படித்த போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். படிப்பை முடித்து தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது நண்பர்கள், அவரது காணொளி ஒன்று இணையதளங்களிலும், ஆபாச வலைதளங்களிலும் வலம் வருவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த காணொளிகளை முடக்கி, நீக்கவும், எதிர்காலத்தில் அது பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்தக் காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோ காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், குடிமக்கள் அத்தனை பேரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என தெரிவித்த நீதிபதி, இதேபோன்ற வழக்கு ஒன்றில் மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதுபோன்ற வழக்குகளில் தமிழக காவல் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் டிஜிபியையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணையை ஜூலை 14 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மேலும் உருக்கமாகப் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "அந்தப் பெண் என் மகளாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் வழக்கறிஞரை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறேன். எனது அறையில் அவரை சந்தித்து தைரியம் கூற வேண்டும். அவருடன் பேசும் போது நான் உடைந்து அழாமல் இருக்க என்னை நானே தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வழக்கறிஞராக இருந்ததால் தான் அவரால் இதில் எதிர்த்து போராட முடிந்தது. அதுவே போராட தைரியமில்லாத மற்ற பெண்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?" எனக் கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். கோர்ட் ரூமிலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டது, அங்கு இருந்தவர்களையும் கலங்கச் செய்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *