அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஆரவாரத்துடன் தொடங்கியது!
- Muthu Kumar
- 15 Jan, 2026
தைப் பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஆரவாரத்துடன் இன்று (ஜன. 15) காலை தொடங்கியது.
ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும். அடுத்தடுத்த நாள்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் கிராமத்தினர் சார்பில் பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.அவனியாபுரத்தில் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்பு விளையாட தகுதி வாய்ந்த 1100 காளைகளும், சுமார் 600 வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் பரிசாக அதிக மாடுகளைப் பிடிக்கும் வீரருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் பல லட்சம் மதிப்புள்ள காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, இரு சக்கர வாகனங்கள், பீரோ, கட்டில், தங்க நாணயம், வெள்ளி பொருள்கள் என பல்வேறு பரிசுகள் காளைகளுக்கும் வீரர்களும் வழங்கப்படுகின்றன.
காலை நிலவரப்படி, பரிசோதனைக்கு வந்த மொத்தம் 108 காளைகளில் 99 காளைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, பரிசோதனையில் 9 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், பார்வையாளர்கள் எளிதில் பார்த்து ரசிக்கும் வகையிலும், அவனியாபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



