முகைதீன் - அஸ்மின் அலி இருவரின் ஆணவமே PN சிதைந்ததற்குக் காரணம்! - பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபம்
- Shan Siva
- 11 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 11: பெரிகாத்தான் நேஷனலுடன் உறவைத் துண்டிக்கும் பாஸ் கட்சியின் முடிவைத் தொடர்ந்து, பெரிகாத்தான் நேஷனலில் இருந்து வெளியேறுமாறு பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பாஸ் கட்சியின் இந்த நடவடிக்கை ஆச்சரியமளிக்கவில்லை என்றும், பெர்சாத்து தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின், பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமது அஸ்மின் அலி மற்றும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் ஆணவமே இதற்குக் காரணம் என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
பெரிகாத்தான் நேஷனலுக்குள் ஒத்துழைப்பு மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதில் பெர்சத்து கட்சி மீண்டும் மீண்டும் தோல்வியடைவது குறித்து அவர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
பெரிகாத்தான் நேஷனலில் இருந்து பெர்சாத்து கட்சி தானாக முன்வந்து விலக வேண்டும் அல்லது கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர்.
PN கூட்டணியில் பெர்சாத்து கட்சிக்கு இனி எந்த மதிப்பும் இல்லை. நாடாளுமன்ற பலத்தைப் பொறுத்தவரை, பெர்சாத்து கட்சியிடம் இப்போது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
பெர்சாத்து கட்சி PN கூட்டணியில் நீடித்தால், அக்கட்சியின் பலவீனமும் முஹைதீனின் ஆணவமும் கூட்டணியை முடக்கிவிடும் என்று அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
PN தலைமையிலான மாநிலங்களில் பெர்சாத்து பிரதிநிதிகள் வகிக்கும் அனைத்து அரசியல் நியமனங்கள் மற்றும் மாநில செயற்குழு பதவிகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கட்சியின் போக்கு குறித்து முஹைதீனிடம் தாங்கள் பலமுறை கவலைகளை எழுப்பியதாகவும், PN கூட்டணிக் கட்சிகளிடையே வலுவான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
இருப்பினும், தங்கள் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாறுபட்ட குரல்களை ஒடுக்க கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
கூட்டணிக் கட்சிகளிடையே உள்ள தோழமை உணர்வை மதிக்க மறுத்தது, இறுதியில் எதிர்விளைவை ஏற்படுத்தி, பெரும் முயற்சியால் கட்டப்பட்ட கூட்டணியின் ஒற்றுமையைக் குலைத்துவிட்டது, என்று அவர்கள் கூறினர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



