நாட்டின் புதிய கடன் படிப்படியாகக் குறைந்து வருகிறது!
- Muthu Kumar
- 26 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 26-
நாட்டு கடனின் ஒட்டுமொத்த நிலை குறித்துப்ப சர்ச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், நாட்டின் புதிய கடன் படிப்படியாகக் குறைந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நிதிப் பற்றாக்குறை இருக்கும் வரை, மொத்தக் கடன் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், புதிய கடன் தற்போது குறைந்து வருவது முக்கியமானது என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
"இந்த நிதிப் பற்றாக்குறை உண்மையிலேயே சவாலானது. முதலாவதாக, நிதிப் பற்றாக்குறை மற்றும் புதிய கடனால், முடிவில்லா அரசியல் விவாதங்கள் ஏற்பட்டாலும், அவற்றைக் குறைக்க மடானி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாம் ஏன் அதை (பற்றாக்குறையை] குறைக்க வேண்டும்? நாம் அதைக் குறைக்கவில்லை என்றால், கடன் பெருகும். அதனால்தான், இந்தப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்.
நாங்கள் அதை 5.6 விழுக்காட்டிலிருந்து,ஐந்து விழுக்காடு, நான்கு விழுக்காட்டிற்கு குறைத்து, தற்போது 3.8 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ளோம். அடுத்த ஆண்டு தொடர்ந்து குறையும்," என்றார் அவர்.நேற்று, திங்கள்கிழமை மேலவையில் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்தபோது டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.
மாறாக, தொடர்ந்து இருந்து வரும் பழைய கடன்களின் வட்டி சுமையால் ஒட்டுமொத்த கடன் அதிகரித்ததோடு, புதிய கடன்கள் குறைந்துவிட்டதை பதிவுகள் தெளிவாகக் காட்டுவதாக அன்வார் குறிப்பிட்டார்.
அதன் பொருட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காட்டை எட்டுவதையும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காட்டிற்கும் மேற்போகாத கடன் அளவை அடைவதையும் இலக்காகக் கொண்டு நிதிப்பற்றாக்குறையை படிப்படியாகக் குறைப்பதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக உள்ளது.
இதனிடையே, உலகப் பொருளாதார
அரங்கில் மலேசியாவின் ஈடுபாட்டையும் பங்களிப்பையும் தீவிரப்படுத்துவதன் மூலம் வட்டார இணைப்பை வலுப்படுத்துவதில் 13ஆவது மலேசியத் திட்டம் முக்கியத்துவம் அளிப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.வட்டார முதலீட்டிற்கான நுழைவாயிலாக நாட்டின் போட்டித்தன்மையை அதிகரிப்பதோடு, பொருளாதார வசதியை இன்னும் முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான முக்கிய அம்சங்களில் இந்த முயற்சி ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஜொகூர், சிங்கப்பூர் பொருளாதார மண்டலம், ஆசியான் மின் கட்டம். ஆசியா சுழிய வெளியேற்ற சமூகம் உட்பட சமூக நீதி மற்றும் சமத்துவ வாய்ப்பை அடைவதற்கான பொருளாதார விநியோக கண்காணிப்பு முயற்சிகள், இதில் அடங்கும்," என்று பிரதமர் கூறினார்.லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதோடு, உயர் மதிப்புள்ள தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும், ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், எல்லை தாண்டிய ஒத்துழைப்பாகும் என்று அவர் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



