வாழ்வின் இருளை அகற்றும் தீப ஒளி திருநாள்!

top-news
FREE WEBSITE AD

எத்திசையிலும் ஒளியும் ஆனந்தமும் நிரம்பியுள்ளன. "தீபம்" என்பது விளக்கை குறிக்க, "ஆவளி" என்பது வரிசையைக் குறிக்கிறது.ஆகவே வரிசையாக விளக்கேற்றி இருளை நீக்கும் பண்டிகையே தீபாவளி.

சில பண்டிகைகள் ஒரு சில பகுதிகளில் கொண்டாடப்படலாம்.ஆனால் தீபாவளி இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் அனுசரிக்கப்படும் பண்டிகையாக திகழ்கிறது. வயது, பாலினம், மொழி, மதம் என்பதனை மீறி அனைவரும் ஒன்றாகக் களிக்கச் செய்கிறது இந்த ஒளியின் திருநாள்.

பல பண்டிகைகள் உபவாசம், வழிபாடு என சடங்குகளால் நிறைந்திருக்கலாம். ஆனால் தீபாவளி அதிலுமின்றி மகிழ்ச்சியின் வெளிப்பாடாகும். இனிப்புகள், புது ஆடைகள், அன்பான சந்திப்புகள், விளையாட்டுகள், நகைச்சுவை-என சேர்ந்து இந்த நாளை சிறப்பாக மாற்றுகின்றன.

தீபாவளி நாளான ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி, அமாவாசையைத் தொடர்ந்து முருகனுக்குரிய கந்த சஷ்டி விரதம் தொடங்குவது, இறைவழிபாடு மற்றும் மகிழ்ச்சி இணைந்த பெரும் நாளாக இதை மாற்றுகிறது. வைணவர்கள் இதனை கண்ணனின் வெற்றிநாளாகக் கொண்டாட, சைவர்கள் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய நாளாக நினைவு கூறுகின்றனர். பெண்கள் கேதார கௌரி விரதத்தையும் இதே நாளில் கடைப்பிடிக்கின்றனர்.

தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நாள். அன்று அதிகாலை பிரம்ம முஹூர்த்த நேரமான 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து எண்ணெய் தடவி நீராடுவது நல்ஓரையாகக் கருதப்படுகிறது. கிழக்கே நின்று சூரியனை தரிசித்து "சூரிய நமஸ்காரம்" செய்வது ஆன்மிக வெளிச்சத்தை அளிக்கும்.

தீபாவளி அன்று "கங்கா ஸ்நானம்" செய்வது மிகப் புண்ணியமானது. அந்த நாளில் எந்த நீரில் நீராடினாலும் அதில் கங்கை தெய்வத்தின் புனிதம் நிறைந்திருக்கும் என பரம்பரையாக நம்பப்படுகிறது. ஆகவே அந்த புனித நீராட்டத்தின் போது கங்கையை நினைத்து ஸ்தோத்திரம் சொல்லி நீராடுவது தீபாவளி நாளின் புனித சிறப்பாகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *