45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!

top-news
FREE WEBSITE AD

 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியாவின் ஆடவர், மகளிர் அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி பெறாமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

தங்கப்பதக்க கனவை நோக்கி முன்னேறி வரும் இந்திய அணிக்கு இந்த தொடரில் 8வது சுற்றின் வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆடவர் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகேசி, விதித் குஜ்ராத்தி வெற்றி பெற்றனர். மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 8-வது சுற்றில் டிரா செய்தார். 3.5புள்ளிகளை பெற்ற இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா அதன் 8-வது சுற்றில் ஈரான் அணியை எதிர்கொண்டது. இந்தியாவைப் போலவே 8 சுற்று வரை ஒரு தோல்வி கூட பெறாமல் அதிரடியாக ஆடி வந்த ஈரான், இந்த சுற்றில் மூன்று முறை தோற்கடிக்கப்பட்டது. 8-சுற்றுகள் முடிவில் 16-புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய ஆடவர் அணி, இன்று தனது 9-வதுசுற்றில் நடப்பு சாம்பியன் உஸ்பெகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. உஸ்பெகிஸ்தானுடனான போட்டி கடினமாக இருப்பதுடன், தங்கப்பதக்கத்திற்கு இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது.

மகளிர் அணியைப் பொறுத்தவரை 8-வது சுற்றில் போலந்து அணியுடன் விளையாடியது. இந்தியாவின் ஹரிகா துரோணோவள்ளி, வைஷாலி தங்களது போட்டிகளில் தோல்வியை தழுவினர். மற்றொரு இந்திய வீராங்கனை வந்திகா அகர்வால் முக்கியமான நகர்த்தலில் தனது போட்டியை டிரா செய்தனர். திவ்யா தேஷ்முக் மட்டும் வெற்றி பெற்று ஆறுதல் அளித்தார். இதனால், இந்த சுற்றில் 1.5 புள்ளிகளை மட்டும் பெற்ற இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலந்து.
இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தாலும் பட்டியலில் இந்திய மகளிர் அணி முதலிடத்தில் உள்ளது. இன்றைய 9-வது சுற்றில் இந்திய மகளிர் அணி அமெரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. தோல்வியில் இருந்து மீண்டு எழும் முனைப்பில் அவர்கள் களமாட உள்ளார்கள். ஆடவர் பிரிவில் இந்திய அணி நடப்பு சாம்பியன் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தினால், தங்கப்பதக்கத்தை நெருங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வெல்வதை தடுத்தது உஸ்பெகிஸ்தான். குறிப்பாக இந்தியாவின் குகேஷ் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவ்-விடம் பின்னடைவை சந்தித்தார். இதன் காரணமாக இந்திய அணியால் வெண்கலப் பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *