இவ்வாண்டில் இதுவரையில் கிளந்தானில் 25 பகடிவதை சம்பவங்கள் நடந்துள்ளன!
- Muthu Kumar
- 23 Oct, 2025
கோத்தா பாரு, அக் 23
இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் மட்டும், கிளந்தானில் உள்ள பள்ளிகளில் நடந்துள்ள பகடிவதைச் சம்பவங்கள் தொடர்பில் மாநில போலீசார் 25 விசாரணை அறிக்கைகளை திறந்திருக்கின்றனர்.
அவற்றில் ஆறு சம்பவங்கள் கோத்தா பாருவிலும், ஐந்து சம்பவங்கள் பாசிர் மாஸிலும், தலா நான்கு சம்பவங்கள் மாச்சாங்கிலும் பாச்சோக்கிலும், மூன்று சம்பவங்கள் தும்பாட்டிலும், இரண்டு சம்பவங்கள் கோல கிராயிலும், ஒரு சம்பவம் தானா மேராவிலும் நடந்திருப்பதாக, கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசோப் மமாட் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜூலை 11ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கும் குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 574) செக்ஷன் 507பி முதல் 507ஜி இன் கீழ் பகடிவதை சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
"பகடிவதை சம்பவங்களை ஒரு தவறான செயலாக இனியும் எடுத்துக் கொள்ள முடியாது. அவற்றை கட்டொழுங்கு அடிப்படையிலான தவறான செயலாகவும் கருதிவிட முடியாது. ஆனால், அவை ஒரு சமூக நோய் என்று, கோத்தா பாருவில் உள்ள இஸ்மாயில் பெத்ரா இடைநிலைப் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.
சிறு அளவில் போதைப் பொருள் விநியோகிப்பாளர்களாக செயல்பட இளம் வயதினரை கவருவதற்காக கிளந்தானில் செயல்படும் சில போதைப் பொருள் விற்பனையாளர்கள் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தி வருவதாகவும் யூசோப் தெரிவித்தார்.
இணையத் தளங்களில் தங்களின் சொகுசு வீடுகள் மற்றும் கார்களை பல போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பதிவேற்றம் செய்து வருவது குறித்த தகவல்களை போலீசார் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



