திருவள்ளுவர் நாள் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
- Muthu Kumar
- 16 Jan, 2026
தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு, தமிழக அரசு வாயிலாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி, திருவள்ளுவர் விருது, ஈ.வெ.ரா., விருது, அம்பேத்கர் விருது, அண்ணாதுரை விருது, காமராஜர் விருது, பாரதியார் விருது, கலைஞர் விருது உள்பட பல விருதாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், "திருவள்ளுவர் விருது பேராசிரியர் சத்தியவேல் முருகனாருக்கும், ஈ.வெ.ரா., விருது வழக்குரைஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வனுக்கும், அண்ணாதுரை விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், காமராஜர் விருது - எழுத்தாளர் இதயத்துல்லாவுக்கும், பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், திரு.வி.க., விருது - முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பேராசிரியர் செல்லப்பாவுக்கும், கலைஞர் கருணாநிதி விருது எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட விடுதலை விரும்பி ஆகியோருக்கும் வழங்கி கௌரவித்தார்.
இதேபோல், இலக்கிய மாமணி விருதுகளில், மரபு தமிழ் விருது - எழுத்தாளர் ராமலிங்கத்துக்கும், ஆய்வு தமிழ் விருது எழுத்தாளர் மகேந்திரனுக்கும், படைப்புத் தமிழ் விருது எழுத்தாளர் நரேந்திரகுமாருக்கும் வழங்கப்பட்டது.
விருது தொகையாக இந்திய மதிப்பில் ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விருதாளர்களுக்கு தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, தனக்கு பரிசாக வழங்கப்பட்டஇந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



