அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டோமா? சாங் லி காங் மறுப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 30-

கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கான தங்களின் ஆதரவை 11 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலை, அக்கட்சியின் உதவித் தலைவர் சாங் லி காங் முற்றாக நிராகரித்துள்ளார்.

அத்தகைய தகவல் "அபத்தமானது" என்று, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டு பிடிப்புத்துறை அமைச்சருமான சாங் வருணித்திருக்கின்றார்.

"ஜனநாயகத்தின் மரபை நிலைநாட்டுவதற்காக, ரபிஸி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த விவகாரத்தில் இதர தரப்பினர் களங்கிய நீரில் மீன் பிடிக்க முனையக் கூடாது" என்று ஒரு முகநூல் பதிவில் சாங் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய பிகே ஆர் கட்சித் தேர்தலில், ரபிஸி அணியிலிருந்து உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சாங் உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் எனும் முறையில் அன்வாருக்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொண்டிருப்பதாக, சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டுள்ள ஓர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

எஞ்சிய 10 பேரடங்கிய பட்டியலில் ரபிஸி ரம்லி, நிக் நஸ்மி, பிகேஆர் உதவித் தலைவரும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருமான அமினுடின் ஹரூண், ஜொகூர் பாரு எம்பி அக்மால் நசீர், பத்து பகாட் எம்பி ஒன் அபு பாக்கார், லேடாங் எம்பி சைட் இப்ராஹிம் சைட் நோ, சுபாங் எம்பி வோங் சென் மற்றும் கோப்பெங் எம்பி டான் கர் ஹிங் ஆகிரோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அன்வாருக்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொண்டிருக்கும் தங்களின் முடிவை அறிவிப்பதற்காக, இந்த எம்பிக்கள் அனைவரும் இன்று வெள்ளிக்கிழமை
ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்த விருப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.ரபிஸியும் நிக் நஸ்மியும் முறையே பொருளாதாரத்துறை அமைச்சர் மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் நீடித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை நேற்றுமுன்தினம் புதன்கிழமை ராஜினாமா செய்திருந்தனர்.

கட்சித் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியுற்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட தாம் எண்ணம் கொண்டிருப்பதாகவும் கட்சியில் எந்த ஒரு பதவியையும் வகிக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றும், கட்சித் தேர்தல் பிரச்சாரங்களின்போது ரபிஸி பொதுவில் அறிவித்திருந்தார். நூருல் இஸ்ஸா, கட்சித் தேர்தலுக்குப் பின்னர் தமக்கு உதவுமாறு தம்மை கேட்டுக் கொண்டதோடு, கட்சியில் பதவி வழங்கப்படக்கூடிய சாத்தியத்தை நூருல் கோடிகாட்டி இருந்ததையும் ரபிஸி அண்மையில் அம்பலப்படுத்தி இருந்தார்.

எனினும், நூருலின் வாய்ப்பை தாம் நிராகரித்து விட்டதாகவும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு எத்தகையதாக இருந்தாலும் அதை தாம் மதித்து ஏற்றுக் கொள்ளப் போவதாகவும் ரபிஸி தெரிவித்திருந்தார்.இம்மாதம் 23ஆம் தேதி நடந்த கட்சித் தேர்தலில், துணைத் தலைவருக்கான போட்டியில், நூருல் இஸ்ஸா அன்வார் மொத்தம் 9,803 வாக்குகள் அல்லது 71.7 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார். ரபிஸிக்கு 3,866 வாக்குகள் அல்லது 28.3 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

Sebelas Ahli Parlimen PKR dikatakan menarik sokongan terhadap Perdana Menteri Anwar Ibrahim, namun Timbalan Presiden PKR Chang Lih Kang menafikan dakwaan itu. Rafizi dan Nik Nazmi meletak jawatan untuk menghormati keputusan pemilihan parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *