அம்பாங் ஜெயா பகுதியில் புலி நடமாட்டம்: 5 கேமராக்கள் பொருத்தப்பட்டன!
- Muthu Kumar
- 14 Oct, 2025
கோலாலம்பூர், அக். 14-
அம்பாங் ஜெயாவின் யூக்கே பெர்டானாவில் கூடுதலாக இரண்டு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க வனவிலங்கியல் மற்றும் தேசிய பூங்காவியல்துறை (பெர்ஹிலித்தான்) அந்த படப்பதிவுச் சாதனங்களைப் பொருத்தியுள்ளது. இதுவரை ஐந்து கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்புப் பணிகள் ஐந்தாவது நாளாக நேற்று நடைபெற்ற வேளையில், அப்பகுதியில் புலியின் நடமாட்டம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை தென்படவில்லை.அக்டோபர் 9 ஆம் தேதியிலிருந்து அங்கு நேரடியான கண்காணிப்புப் பணிகளும் கால்சுவடுகளை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. டிரோன்கள் மூலமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. காட்டுப் பன்றிகள், தெரு நாய்களின் கால்சுவடுகள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று பெர்ஹிலித்தானின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடிர் அபு ஹஷிம் கூறினார்.
மலாயன் வகை புலிகள் திரியும் வட்டாரத்திற்குள் யூக்கே பெர்டானா பகுதி அமைந்திருக்கவில்லை. ஆனாலும், காட்டு விலங்குகள் நடமாடும் உலு லங்காட் வனப்பகுதி மற்றும் அருகில் உள்ள காடுகளை ஒட்டியபடி யூகே பெர்டானா அமைந்துள்ளது என்றார் அவர். யூக்கே பெர்டானாவில் பங்சாபுரி ஸ்ரீபைடூரி குடியிருப்புப் பகுதியில் புலியின் உறுமல் சத்தம் அவ்வப்போது கேட்பதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



