கலவரத்தை தூண்டும் வழக்கில் சீமானை விடுவிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு!

- Muthu Kumar
- 07 Feb, 2025
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்தது.வழக்கு விசாரணைக்கு அவா் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்துவிட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தோ்தலின்போது, நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசி, வன்முறையைத் தூண்டியதாக கஞ்சனூா் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவா் புகாா் அளித்தாா்.
அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடா்ந்து நடத்த வேண்டும். வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவா் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தாா்.சீமான் தனிப்பட்ட நபா்களைத் தூண்டும்விதமாக கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துகளை பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கவும் சீமான் தரப்பு வழக்குரைஞருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *