விஜய் - உதயநிதி வலுத்தது மோதல்!
- Muthu Kumar
- 17 Nov, 2025
இப்போது மக்கள் புதிதாக கிளம்பி இருக்குறாங்க.. எப்படி அறிவு திருவிழா நடத்தினீர்கள்.யாரை கேட்டு நடத்துகிறீர்கள். எதுக்காக நடத்துகிறீர்கள் என்று கேட்கிறாங்க. அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான். அறிவு என்கிற வார்த்தையை கேட்டாலே அவங்களுக்கு அலர்ஜி.
சுகாதாரம் பற்றி பேசினால் கிருமிகளை பற்றி பேசாமல் இருக்க முடியுமா. அதனால் தான் அறிவு திருவிழாவில் கொள்கை பற்றி பேசும்போது கொள்கையற்ற கும்பலின் ஆபத்து பற்றி பேசி சுட்டிக்காட்டினர்'' என தவெக தலைவர் விஜய்க்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக கட்சியின் 75வது ஆண்டு விழாவையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த 8 ம் தேதி இந்த விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்கள்.அப்போது தவெகவை மறைமுகமாக விமர்சனம் செய்தனர். இதனால் தவெக தலைவர் விஜய் டென்ஷன் ஆனார்.
இதையடுத்து தவெக தலைவர் விஜய் திமுக மற்றும் அதன் அறிவுத் திருவிழாவை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார். அதில், ''திமுகவின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது. அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?
நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்க தொடங்கி உள்ளனர்.அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?'' என கூறியிருந்தார்.
விஜயின் இந்த அறிக்கைக்கு திமுகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் திமுகவின் அறிவுத் திருவிழாவின் புத்தக திருவிழா இன்று முடிவடைந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது விஜய்க்கு பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ''இப்போது மக்கள் புதிதாக கிளம்பி இருக்குறாங்க.. நாம் அறிவுத்திருவிழா நடத்தி 4 நாட்களுக்கு பிறகு தான் அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது. எப்படி அறிவு திருவிழா நடத்தினீர்கள். யாரை கேட்டு நடத்துகிறீர்கள். எதுக்காக நடத்துகிறீர்கள் என்று கேட்கிறாங்க. அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான்.
அறிவு திருவிழாவில் அவர்களே விமர்சித்து பேசுகிறோம் என்று கோபம் வேறு. எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமோ,அறிவு என்கிற வார்த்தையை கேட்டாலே அவங்களுக்கு அலர்ஜி. சுகாதாரம் பற்றி பேசினால் கிருமிகளை பற்றி பேசாமல் இருக்க முடியுமா. அதில் இருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்று சொன்னால் தான் சுகாதார மேம்பாடு பற்றி பேச முடியும். அதனால் தான் அறிவு திருவிழாவில் கொள்கை பற்றி பேசும்போது கொள்கையற்ற கும்பலின் ஆபத்து பற்றி பேசியதை சுட்டிக்காட்டி உள்ளனர். இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம். இல்லை. திமுக என்பதே ஒரு அறிவு இயக்கம். வெற்று அட்டைகளுக்கு பதில் சொல்ல வேண்டாம்'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



